ஜெயலலிதாவை சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்- ஜாமீனில் வந்த பின்னர் முதல் சந்திப்பு!
சிறையில் இருந்தபோதும், ஜாமீனில் விடுதலையாகி வந்த பிறகும் ஓ பன்னீர் செல்வம் உள்பட யாரையும் சந்திக்காமல் இருந்து வந்தார் ஜெயலலிதா. இந்த நிலையில் இன்று முதல் முறையாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசியுள்ளார் ஜெயலலிதா.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பெரும் பா்திப்புகள் ஏற்பட்டன. அணைகளும் நிரம்பி வருவதால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசு வெள்ள நிவாரணப் பணிகளை சரிவர செய்யாமல் மெத்தனமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி, அமைச்சர்கள் களத்தில் இறங்காமல் இருப்பதை சுட்டிக் காட்டி கடுமையான அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில் ஓ.பி.எஸ்ஸை அழைத்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.