கத்தியோடு வந்த நபர் மகளின் திருமணத்திற்கு சீர்வரிசை அளித்து அனுப்பிய பன்னீர்செல்வம்!
சென்னை: திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க கத்தியுடன் வந்து போலீசாரிடம் சிக்கிய அதிமுக தொண் சோலை ராஜன் பன்னீர் செல்வத்தை அவரது பெரியகுளம் இல்லத்தில் சந்தித்தார்.
சென்னையில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் செல்வதற்காக விமானத்தில் திருச்சிக்கு வந்தார். அவரை வரவேற்று கோஷமிட்ட ஆதரவாளர்களை நோக்கி சென்ற பன்னீர்செல்வம் அவர்கள் அருகில் சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்பை ஏற்றார்.
ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்ற கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஓபிஎஸ் அருகே நின்ற தொண்டர் ஒருவரிடம் இருந்து சிறிய கத்தி கீழே விழுந்தது. அதனை குனிந்து எடுத்தபோது, பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து, கத்தியை பறித்தனர். அவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். பிறகு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஓபிஎஸ் அணிக்காரர்
கத்தியுடன் சிக்கியவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருச்சி 34வது வார்டு டிவிஎஸ் டோல்கேட் வில்வநகரை சேர்ந்த ரிக்ஷா தொழிலாளியான சோலைராஜா என்பதும், அதிமுகவை சேர்ந்த இவர் ஓபிஎஸ் அணியில் இருப்பதும் தெரியவந்தது.
மகள் திருமணம்
சோலைராஜாவை கைது செய்து போலீசார் விசாரித்தனர். சோலைராஜாவின் மகள் திருமணம் வரும் 27ம் தேதி நடப்பதால், நிதியுதவி கேட்டு பெறுவதற்காகவும், பன்னீர்செல்வத்தோடு இணைந்து நின்று போட்டோ எடுத்து மகள் திருமணத்தின்போது பிளக்ஸ் வைப்பதற்காக வந்ததும் விசாரணை தெரியவந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
|
கத்தியுடன் பிடிபட்டார்
ஆனால், இது தெரியாமல், திருச்சி விமான நிலையத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பன்னீர்செல்வம் புறப்பட்டு சென்றபோது அளித்த பேட்டியில், ‘‘எனக்குரிய பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்பது திருச்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது'' என்று கூறியிருந்தார்.
சந்திப்பு
நடந்த தவறை உணர்ந்து கொண்ட பன்னீர்செல்வம், சோலைராஜனை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். நேற்று பெரியகுளத்திலுள்ள பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்ற சோலைராஜன். ஓபிஎஸ்சை சந்தித்து விளக்கம் அளித்தார். தனது கோரிக்கைகளையும் முன்வைத்தார். அதை கேட்டுக்கொண்ட பன்னீர்செல்வம், சோலைராஜன் மகள் திருமணத்திற்கு தேவையான சீர் வரிசை பொருட்களை கொடுக்க ஏற்பாடு செய்ததோடு, வாழ்த்தி அனுப்பியுள்ளார். சோலைராஜன் எப்போதுமே கத்தியை வைத்திருக்கும் வழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது