மாணவி வளர்மதி கைது.. பட்டும்படாமல் கருத்து சொன்ன பன்னீர்செல்வம்!
சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடுவதற்கு முன்னர் அரசு சிந்தித்து முடிவெடுத்திருக்கலாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடுவதற்கு முன்னர் அரசு சிந்தித்து முடிவெடுத்திருக்கலாம் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் இதழியல் மாணவி வளர்மதி. நக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்க்கும் புகாரில் கைது செய்து சேலம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது, குண்டர் சட்டம் போடப்பட்டதையடுத்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வளர்மதி மீதான குண்டர் சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாணவி வளர்மதி பிரச்சனையில் அரசு இன்னும் சிந்தித்து முடிவு எடுத்திருக்கலாம் என்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. நடிகர் கமல் அரசியலுக்கு வருவது என்பது அவருடைய தனிப்பட்ட சுதந்திரம்.
ஆறுக்குட்டி எங்கள் அணிக்கு தானாக வந்தார். தானாகவே விலகியுள்ளார். அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அழைப்பு கொடுக்கப்பட்டது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.