கருணாநிதி ஹீரோவாக முடியாது என்றைக்கும் 'ஜீரோ'தான்: இது ஓ.பி.எஸ் அட்டாக்!
சென்னை: மழை வெள்ள நிவாரண நடவடிக்கை குறித்து எத்தனை பொய்க்குற்றச்சாட்டுகள் கூறினாலும் கருணாநிதி ஒருபோதும் ஹீரோவாக முடியாது என்றைக்கும் அவர் ஜீரோதான் என முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மழைக்கால நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை என விமர்சித்து, 'பதவி நிலைத்திடவாவது; பதறி எழுவீர்!' என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'மக்களை ஏமாற்றியாவது பதவியை அடைந்திட இயலுமா?' என்ற பதற்றத்தில் கருணாநிதியின் அறிக்கை வெளியிட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழ்நாடு அரசு வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை துவங்கிய பின் எடுத்த மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ளாமல், கற்பனை குதிரையை ஓடவிட்டு, ஒரு வெற்று அறிக்கையை அரசியல் ஆதாயம் தேடும் எண்ணத்தில், வெளியிட்டு இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில், அமைச்சர்களோ, அதிகாரிகளோ வெள்ளப் பகுதிகளை பார்வையிடவில்லை என்று கூறி இருக்கிறார்.
மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 20 மாவட்டங்களுக்கு உயர் அதிகாரிகள் அனுப்பப்பட்டு, அவர்கள் அங்குள்ள வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நடைபெற்ற மீட்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் கவனித்தனர். அரசின் துரித நடவடிக்கை காரணமாகத் தான் திண்டுக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 நபர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. பல்வேறு அமைச்சர்களும் அவர்கள் துறை சார்பான அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்துள்ளனர்.
இது தவிர, மாநகராட்சிகளின் மேயர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு,தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவும் உறுதுணையாக இருந்துள்ளனர். இவையெல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வெளி வந்துள்ளன.
மக்கள் ஏமாளிகளா?
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இவற்றை எல்லாம் மூடி மறைத்து அறிக்கை வெளியிட்டாலும், அதனைப் படித்து ஏமாந்து போக தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை என்பதை கருணாநிதி உணர்ந்து கொள்ள வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக கருணாநிதி கூறியிருப்பது உண்மைக்கு மாறான தகவல்.
உண்மைக்கு மாறானது
உண்மை நிலை என்னவென்றால், சுமார் 53,000 ஏக்கர் நிலப் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மட்டுமே நீரில் மூழ்கி உள்ளதாக தகவல் வரப் பெற்றுள்ளது. வெள்ள நீர் வடிந்த பிறகு பயிர்ச் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நீரோ கருணாநிதி
தி.மு.க. ஆட்சியின் போது மக்கள் பணிகளை கவனிக்காமல், தன் புகழ்பாடும் விழாக்களில் பங்கேற்று புளகாங்கிதம் அடைந்தவர் கருணாநிதி.
2010 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக மக்கள் வெள்ளத்தால்
அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், "இளைஞன்" திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர் "நீரோ" கருணாநிதி.
ஜீரோ கருணாநிதி
இப்படிப்பட்ட கருணாநிதி அதிமுக அரசைப் வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ"" என்பதற்கேற்ப மனம் போன போக்கில் வேண்டுமென்றே குறை கூறி ஹீரோ ஆகிவிடலாம் என பகல் கனவு கண்டாலும், கிடைக்கப் போவது "ஜீரோ"தான். எனவே, அரசியல் ஆதாயத்திற்காக பொய்க் குற்றச்சாட்டுக்கள் கூறுவதை கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.