இறங்கி வந்தது ஓ.பி.எஸ் கோஷ்டி.. எடப்பாடி கோஷ்டியோடு பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைப்பு
நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டும், ஓ.பன்னீர்செல்வம், நாங்களும் பேச்சுவார்த்தைக்கு ஒரு கமிட்டியை அமைக்கவிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் பேச்சுவார்த்தைக்கு ஒரு குழுவை அமைத்துள்ளதுதமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபா எம்.பி வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட சீனியர் அமைச்சர்கள் அடங்கிய குழுவை எடப்பாடி பழனிச்சாமி அணி உருவாக்கியுள்ளது. இந்த தகவல் காலையில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று மாலை, கிரீன்வேஸ் சாலையிலுள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஓ.பி.எஸ் கோஷ்டி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டியளித்தார்.
முனுசாமி பேட்டி
அவர் கூறுகையில், நேற்று ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தாக இரு கருத்தை வைத்தோம். இன்று, வைத்திலிங்கம் தலைமையில், பேச்சுவார்த்தைக்காக, ஒரு கமிட்டி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமிட்டி அமைப்பு
கழக தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டும், நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டும், ஓ.பன்னீர்செல்வம், நாங்களும் பேச்சுவார்த்தைக்கு ஒரு கமிட்டியை அமைக்கவிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
பின்னர் தெரியும்
அந்த கமிட்டியில் யார், யார் அங்கம் வகிப்பார்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே இரவு ஓ.பி.எஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, முன்னாள் அமைச்சர் செம்மலை அளித்த பேட்டி: எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கே.பி.முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், ஜேசிபி பிரபாகர், மாஃபா பாண்டியராஜன், பிஹெச் மனோஜ்பாண்டியன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வமும் இதை உறுதி செய்தார்.
நிபந்தனைகள் என்னவாச்சு?
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்பது, சசிகலா குடும்பத்தாரை மொத்தமாக அதிமுகவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான், பேச்சுவார்த்தை நடத்த சம்மதிப்போம் என நேற்று முனுசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.