முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லி பயணம்: மோடி அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நீதிபதிகள், முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்கும் அவர், பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாநில ஹைகோர்ட் நீதிபதிகள் கலந்து கொள்ளும் 3 நாள் மாநாடு நேற்று டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற கட்டிடத்தில் தொடங்கியது.
மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து பங்கேற்று பேசினார். நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றியும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட்டது.
இன்று 2வது நாளாக மாநாடு நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநில தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் மாநாடு நாளை காலை டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறுகிறது.
இதில் அனைத்து மாநில முதல்வர்களும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் பங்கேற்கிறார்கள். இதில் கலந்துகொள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி செல்கிறார்.
ஞாயிறுக்கிழமை காலை நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து பேசுகிறார். மத்திய சட்ட மந்திரி சதானந்த கவுடா வரவேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து சிறப்புரையாற்றுகிறார்.
நாடு முழுவதும் கீழ் நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் 2 கோடியே 64 லட்சம் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்தும் உயர்நீதிமன்றத்தில் நிலவையில் உள்ள 42 லட்சம் வழக்குகளை விரைந்து முடிப்பது பற்றியும், நீதிமன்றங்களின் உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது பற்றியும் இதில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
பெண்கள், சிறுவர்களுக்கான எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் முதல்வர்களும் பேசுகின்றனர்.
மாநாடு முடிந்ததும் அசோகா ஓட்டலில் பிரதமர் மோடி அனைவருக்கும் விருந்து கொடுக்கிறார். இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்கிறார்.