முதல்வராக இருந்தபோது ஓ.பி.எஸ்சுக்கு ஜெ. மரணத்தில் சந்தேகம் வரவில்லையே ஏன்? தங்கதமிழ்ச்செல்வன் நறுக்
சென்னை: 60 நாட்களாக ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வர் பொறுப்பை கவனித்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது மர்மம் இருப்பதாக விசாரிக்க கோருகிறார் என விமர்சனம் செய்தார் அதிமுக (அம்மா) கட்சியின் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத் தமிழ்ச்செல்வன்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசிய தங்கத் தமிழ்ச்செல்வன் முன்னதாக டிடிவி தினகரனுடனும் ஆலோசனை நடத்தியிருந்தார்.
நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த தங்கத் தமிழ்ச்செல்வன், "ஜெயலலிதா அம்மா மீது சத்தியமாக கூறுகிறேன், நீதி விசாரணை வேண்டும். 60 நாட்களாக முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவம் பார்த்தது. எய்ம்ஸ் டாக்டர்கள் மருத்துவம் பார்த்தனர். எய்ம்ஸ் மருத்துவமனை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அப்படியானால் யாரையெல்லாம் விசாரணைக்கு கூப்பிடுவீர்கள். பிரதமர் மோடியை விசாரணைக்கு கூப்பிட வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு கூப்பிட வேண்டும், லண்டன் டாக்டர், சிங்கப்பூர் டாக்டர்களையெல்லாம் விசாரணைக்கு கூப்பிட வேண்டும். இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாக வேண்டும்.
மர்மம் மர்ம்னு எத்தனை நாளைக்குப்பா சொல்லுவீங்க?, 60 நாட்களாக முதல்வராக இருந்தபோது மர்மம் தெரியவில்லை, முதல்வர் பதவி பறிபோனதும் இப்போது மர்மம் தெரிகிறதா? இது நியாயமான முறையல்ல. இவ்வாறு தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.