தமிழக - கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நக்சலைட் சிக்கினார்... பொம்மைத் துப்பாக்கியுடன் கைது!
செங்கோட்டை: தமிழக, கேரள எல்லைப் பகுதியில் கேரளாவுக்குள் உள்ள தென்மலை வனப்பகுதியில் பொம்மைத் துப்பாக்கியுடன் தனியாக சுற்றித் திரிந்த ஒடிஷாவைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக, கேரள எல்லையையொட்டி தென்மலை வனப்பகுதி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு மாவோயிஸ்டுகள் புகுந்திருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கேரள போலீஸார் நக்சலைட் வேட்டையில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் 2 முறை தாக்குதல்களும் நடந்தன. இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு நபர் மர்மமான முறையில் நடமாடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து போலீஸார் அந்த நபரை பிடித்தனர். கையில் துப்பாக்கி இருந்தது. வாங்கிப் பார்த்தபோது அது பொம்மைத் துப்பாக்கி என்று தெரிய வந்தது. அந்த நபரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்ற போலீஸார் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் ஜெக்வந்த் பூஜாரி என்றும், ஒடிஷாவைச் சேர்ந்தவர் என்றும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் புனலூர் கோர்ட்டில் நேற்று மாலையில் ஆஜர்படுத்தி இரவோடு இரவாக சிறையில் அடைத்தனர். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போது உண்மைகள் தெரிய வரும் என்று தெரிகிறது.