ஆரியங்காவு குகையில் மண் சரிவு.. அதைப் பார்க்காமல் "ஆய்வு" மேற்கொண்ட ரயில்வே அதிகாரிகள்
செங்கோட்டை: செங்கோட்டை, கொல்லம் ரயில் பாதையை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள், ஆரியங்காவு குகையில் ஏற்பட்ட மண் சரிவை பார்க்காமல் சென்றதால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தையும் கேரளாவையும் இணைத்த முக்கிய ரயில் பாதை செங்கோட்டை கொல்லம் ரயில் பாதை. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த ரயில் பாதையில் செங்கோட்டை புனலூர் இடையே உள்ள 51 கிலோ மீட்டர் தொலைவு மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதை அமைக்கும் பணிகடந்த 48 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இப்பணியை மூன்று ஒப்பந்தக்காரர்கள் செய்து வருகின்றனர். இத்தடத்தில் 5 மலைக்குகைகள் உள்ளன. புளியரை ஆரியங்காவு பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள முதல் மலைக்குகை உள்ளது. இந்த குகையில் 200மீட்டர் தூரம் வரை இரும்பு கம்பிகளால் வளைவை உருவாக்கி சிமெண்ட் சிலாப்புக்கள் வைத்து ஆர்ச் கட்டப்பபட்டு வருகிறது. இப்பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
நேற்று மாலையில் குகையில் பணி நடந்துக் கொண்டிருந்த போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு குகைப் குதியை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். அதன் பின் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்க்கனவே கடந்த ஆண்டு மண் சரிந்து விழுந்தது. அதை அகற்றி முடித்து அடுத்தக்கட்ட பணிகளுக்கு செல்லும் போது மீண்டும் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பணிகள் எதுவும் தொடரவேண்டாம் என்றும் அதிகாரிகள் தரப்பு சொல்லியுள்ளதால் பணிகள் அனைத்தும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் மத்தியில் கேட்டபோது இத்தடத்தில் உள்ள பாறைகள் அனைத்தும் சுக்கான் வகைப் பாறைகள் கடினத் தன்மை கிடையாது. சரல் வகையை சார்ந்தது. அதனால்தான் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது என்றனர். இந்த தடத்தில் நாளை தென்னக ரயில்வே அதிகாரிகள் குழு நேரில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர் என்று நேற்று தெரிவித்தனர்.
அதன்படி, இந்த பகுதியை இன்று பார்வையிட தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி மற்றும் கொல்லம் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன், பத்தினம் திட்டா பாராளுமன்ற உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் உள்ளிட்டோர் வருவதாகவும், இதனை பார்வையிட்ட பின்னர் அவர்கள் ஆரியங்காவு பாலம், தென்மலை 13 கண் பாலம், புனலூர் ரயில்வே நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்துதல் போன்ற ஆய்வுகளை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் அதிகாரிகள் குழுவினர் அங்கு வராமல் நேராக ஆரியங்காவு ரயில்வே பாலம் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை முடித்துவிட்டு சென்றுவிட்டனர். வரும் 15ந் தேதி தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா வர இருப்பதால், இந்த அதிகாரிகள் இந்த சுற்று பயணத்தை முடித்து சென்றதாக பயணிகள் நலச் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.