சென்னை பாஜக பிரமுகர் துணிக்கடையில் ரூ.40 கோடி பழைய ரூபாய் நோட்டு பறிமுதல்
சென்னை: சென்னையில் போலீசாருக்கான சீருடைகள் விற்பனை செய்யும் துணிக்கடையில் ரூ.40 கோடி மதிப்புள்ள பழைய ரூ. 500, ரூ. 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கடை, கோடம்பாக்கத்திலுள்ளது. இந்த துணிக்கடையில் கட்டுக்கட்டாக பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.40 கோடியாகும்.
இதையடுத்து, போலீசாருக்கான சீருடைகள் விற்பனை செய்யும் அந்த கடையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊழல், லஞ்சம் போன்றவற்றால் சேர்க்கப்பட்டு, அதை மாற்ற முடியாமல் தேங்கிய பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக, கடை உரிமையாளரான, பாஜக பிரமுகர் தண்டபானி என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நகைக்கடைக்கு மாற்றித்தர பணத்தை துணிக்கடையில் வைத்திருந்ததாக அவர் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
சமீபத்தில் பெங்களூரில் பாம் நாகா என்ற ரவுடி வீட்டிலிருந்து பல கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் உயரதிகாரிகள் தன்னிடம் கொடுத்து, புது நோட்டுக்களாக மாற்றித்தர கோரினர் என அவர் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.