பயிர் கருகியதால் விரக்தி.. கும்பகோணம் அருகே வேதனையில் விவசாயி பலி
கும்பகோணம் அருகே பயிர் கருகியதால் விவசாயி நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் கிடைக்காததால் 2 ஏக்கர் நெல் பயிர் கருகியதை பார்த்த விவசாயி பரிதாபமாக உயிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கருகிய பயிர்களை பார்த்து விவசாயிகள் பலர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.
பருவமழை பொய்த்தால் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்களும், மஞ்சள் பயிர்களும் கருகியதால் விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்குப் போட்டும் உயிரை மாய்த்துக்கொண்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கோடை மழையும் சரிவர பெய்யாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கும்பகோணம் ஆலமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி தியாகராஜன்(56) என்பவர் நெல் பயிரிட்டுள்ளார். போதிய அளவு மழை இல்லாததால் பயிர்கள் கருகி உள்ளன. இதனிடையே ஆழ்குழாய் அமைத்து 2 ஏக்கரில் விவசாயம் செய்து வந்துள்ளார். இருப்பினும் ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கருகியுள்ளன. இதைபார்த்த விவசாயி தியாகராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.