கரூரில் எழுத்தாளருக்கு எதிராக தொடரும் போராட்டம் – கல்வீச்சு, தாக்குதல், ஆதரவாளர்களுக்கு அடி,உதை!
கரூர்: எழுத்தாளர் புலியூர் முருகேசன் எழுதிய "பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு" என்ற நாவலுக்கு எதிராக கரூரில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், முருகேசன் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
முருகேசனின் நாவலில் தங்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்கள் இருப்பதாக கொங்கு வேளாளர் எனப்படும் கவுண்டர் சமூகத்தினர் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த புத்தகத்தை தடை செய்யக்கோரி, திருச்சி கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு பேருந்துகள் மீது கல்வீச் தாக்குதல் நடத்தியதால் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. திண்டுக்கல் மாவட்டம் ஆனைப்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் முருகேசன், கரூர் மாவட்டம் புலியூரில் வசித்து வருகிறார்.
கடந்த புதன்கிழமை ஒரு கும்பல், எழுத்தாளர் புலியூர் முருகேசனை காரில் கடத்திச் சென்று தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், எழுத்தாள ருக்கு ஆதரவாக ஊடகங்களில் கருத்து தெரிவித்த திருக்குறள் பேரவை நிர்வாகி மேலை.பழனியப்பன் வீட்டை சிலர் முற்றுகையிட்டு, கல்வீசித் தாக் கினர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர் அவர்கள் கரூர் பேருந்து நிலையம், வையாபுரி நகர், புறவழிச் சாலை பகுதிகளில் பேருந்துகள் மீது கல் வீசித் தாக்கினர்.
இதில் 5 க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இது தொடர்பாக 10 க்கும் மேற்பட்டோர் மீது கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எழுத்தாளர் முருகேசன் கூறும்போது, "நான் எழுதியது திருநங்கை குறித்த கதை. சில தகவல்களை கற்பனை கலந்து எழுதியுள்ளேன்.
சாதி அபிமானமோ, எதிர்ப்போ எனக்கு கிடையாது. இதுகுறித்து என்னிடம் கேட்டபோது, நிபந்தனை யற்ற மன்னிப்பு கேட்டுக்கொள் வதாகத் தெரிவித்துள்ளேன்' என்றார்.