வேலூரில் வெயிலுக்கு முதியவர் பலி... 115 டிகிரியை தாண்டுமாம்!- எச்சரிக்கும் வானிலை
வேலூரில் வெயிலுக்கு முதியவர் பதிவாகியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு வெயில் 115 டிகிரி பாரன்ஹீட் அளவை தொடும் என்று வானிலை எச்சரித்துள்ளது.
சென்னை: சுடும் கோடை வெப்பத்திற்கு வேலூர் மாவட்டத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். வேலூர், திருவண்ணாமலையில் வெயில் 115 டிகிரிவரை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சில ஆலோசனைகளை சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவநிலை மாறுபாடு காரணமாக காலம் மாறி அதிக வெயிலும், மழையிம் மாறிமாறி ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதிக வெயில் நிலவும் என்றும், மழையம் பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே கோடை வெப்பம் தகித்து வருகிறது. பிற்பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. கடந்த சில நாட்களாக 9 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. கரூர் பரமத்தி வேலூரில் 106.16, வேலூரில் 104, சேலத்தில் 103.1, மதுரை, திருப்பத்தூர், பாளையங்கோட்டையில் தலா 102.92, திருச்சியில் 102.02, தருமபுரியில் 101.48 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
115 டிகிரியை தொடும்
தமிழகத்தில் இனிவரும் நாட்களில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை கூட 82.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயிலூர் என்று அழைக்கப்படும் வேலூரில் கோடையின் தொடக்கத்திலேயே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கிறது. கடந்த வாரமாக 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்துகிறது.
முதியவர் பலி
கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. வயதானவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். வெயில் காரணமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் முதியவர் ஒருவர் பலியானார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்ப நிலையைவிட 5 டிகிரி செல்சியஸ் அளவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயில் அளவு 115 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெயிலை சமாளிக்கவும், பாதுகாத்துக்கொள்ளவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆகியோர் பொதுமக்களுக்கு ஆலோசனைகளை கூறியுள்ளனர்.
குளிர்பானங்கள் குடியுங்கள்
தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும். லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழு கை ஆடைகள், நூல் துணி பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாத நீர், எலுமிச்சை சாறு, மோர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழ ரசங்கள் ஆகியவை பருக வேண்டும். இளநீர், நொங்கு, தர்பூசணி, மோர் அதிகமாக உட்கொள்ள வேண்டும். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.
வளர்ப்பு பிராணிகளுக்கு பாதுகாப்பு
கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும். குழந்தைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் மூடிய வாகனங்களில் தனியாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டாம்.
நோயாளிகள் கவனம்
சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படலாம். எனவே அவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
காரமாக சாப்பிடாதீங்க
மது, தேனீர், காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிக புரதம் அல்லது மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்.
கோடை வெப்பம் தொடர்பான சேவைக்கு பொதுமக்கள் 1077, 104 ஆகிய தொலை பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.