டோர்னியர் விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதம் நிறைவு! சோகத்தில் விமானிகள் குடும்பம்
சென்னை: தமிழ்நாட்டு கடல் பகுதியில் மாயமான டோர்னியர் விமானம் பற்றி ஒரு மாதம் கடந்தும் தகவல் கிடைக்காததால், விமானிகளின் குடும்பங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன.
சென்னையில் இருந்து கடந்த மாதம் 8ம் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘டோர்னியர்' விமானம் 3 பேருடன் மாயமானது. இதனை இயக்கிய விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி மற்றும் கடலோர காவல் படை அதிகாரி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் குறித்து எந்த தகவலும் தெரியாமல் உள்ளது.
தேடுதல்
மாயமான விமானம் சிதம்பரம் நகரத்தின் கிழக்கே 16 கடல் மைல் தூரத்தில் தான் விழுந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி அந்தப் பகுதியில் 12 இந்திய கடலோர பாதுகாப்புப்படை கப்பல்களும், இந்திய கப்பல் படையின் 6 கப்பல்கள் மற்றும் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நவீன கருவிகள்
நவீன தொலைதொடர்பு வசதிகள் கொண்ட ‘சாகர்நிதி', ‘ரிமோட்லி ஆபரேட்டிங் வெசல்' என்ற நவீன கருவிகள் கொண்ட ஒலிம்பிக் கேன்யான் போன்ற கப்பல்கள் அதிநவீன கருவிகளுடனும் தேடியும் எந்த தடயமும் கிடைக்காததால், இந்த கப்பல்கள் தேடும் பணியை கைவிட்டுவிட்டு மீண்டும் திரும்பின.
விமானிகள் குடும்பத்தார்
இந்நிலையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் மாயமான விமானத்தை கண்டறிவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாதது, அதிருப்தி அளிக்கிறது என்று டோர்னியர் விமானத்தில் பயணம் செய்த துணை விமானி சுபாஷின் தாயார் பத்மா தெரிவித்துள்ளார். சுபாஷின் மனைவி தீபா லட்சுமி, தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு, பிரதமருக்கு டிவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஒரு மாதம் ஆனது
இருப்பினும், ஒரு மாதம் ஆகியும் இன்னும் விமானம் பற்றி தகவல் கிடைக்கவில்லை. திருச்சி ரேடாரில் கடைசியாக அந்த விமானம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி நடுவே பயணித்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுவரை விமானம் பற்றி தகவல் கிடைக்காதது விமானிகளின் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கருப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல்களும் விமானத்தை தேடும் பணியில் பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தேடும் பணி தொடருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.