ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க எதிர்ப்பு - குவியும் வழக்குகள் : ஹைகோர்ட் ஒத்திவைப்பு
மறைந்த ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னைஉயர்நீதிமன்றம் மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஜெயலலிதா பெயரில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அத்துடன் ஜெயலலிதாவுக்கு அரசு பணத்தில் நினைவிடம் கட்டவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் குமரன் என்பவர், இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாட்டுக்காக தியாகங்களை செய்தவர்களுக்கு சிலைகள், நினைவிடங்கள் ஆகியவை அரசு சார்பில் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நினைவிடம் அமைக்க எதிர்ப்பு
ஊழல் வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைப்பது எதிர்கால சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணமாகி விடும் என்று கூறியுள்ள அவர், மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கக்கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார்.
ஹைகோர்ட்டில் விசாரணை
அரசு அலுவலங்களில் ஜெயலலிதா புகைப்படத்தை அகற்றவும், அரசு திட்டங்களில் இருந்து ஜெயலலிதாவின் புகைப்படத்தை நீக்கவும் உத்தரவிட அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
மார்ச் 20க்கு ஒத்திவைப்பு
அப்போது, இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த வழக்கு மார்ச் 20ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தனர். அன்றைய தேதிக்கே இந்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறிய நீதிபதிகள், மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
நினைவிடம் அமைக்க எதிர்ப்பு
நாட்டுக்காக பல தியாகங்களை செய்த தலைவர்களுக்கு சிலைகள், நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது எதிர்கால சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணமாகி விடும். அதனால் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரை மட்டுமல்லாமல், எந்த பொது இடத்திலும் நினைவிடம் அமைக்க கூடாது. மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியை அகற்ற வேண்டும் என்று பலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.