ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி சாவு... நெல்லையில் பதற்றம்
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி இறந்து போனதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி: நெல்லையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்செல்லப்பட்ட விசாரணை கைதி லாக்அப்பில் இறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் பழனி. இவருக்கு வயது 40. இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு திருட்டு,வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இவரை நேற்றுமுன்தினம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் கைது செய்தனர். இரண்டு நாட்கள் ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு போலீஸ் விசாரணையின்போது அவர் இறந்துள்ளார். போலீஸ் ஸ்டேஷன் லாக்அப்பில் கைதி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது சொந்த ஊரான சிவலார்குளத்திலும் பதற்றம் ஏற்பட்டது.
அவரது உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு வந்தனர். சொந்த ஊரில் மறியல் போராட்டம் நடக்கலாம் என்பதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.