அக்டோபர் 11ல் உதயமாகிறது அப்துல் கலாம் சர்வதேச பவுண்டேஷன்... சென்னையில் தொடக்க விழா!
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயரில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை அவரது குடும்பத்தினர் தொடங்குகின்றனர். அக்டோபர் 11ம் தேதி சென்னையில் இதற்கான தொடக்க விழா நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் உள்ள கலாமே நேசிக்கும் லட்சோபம் லட்சம் மக்களின் அபிலாஷைகளை இந்த அறக்கட்டளை நிறைவேற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா மிஷன் ஹெரிடேஜ் மையத்தில் அக்டோபர் 11ம் தேதி நடைபெறுகிறது.
கலாம் குடும்பத்தினர்
இந்த அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் கலாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இடம் பெறுவார்கள். அவர்கள் தவிர அவரது நெருங்கிய நண்பர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட சிலர் ஆலோசகர்களாக செயல்படுவார்கள்.
சர்ச்சைகளுக்கு இடமில்லை
ஏற்கனவே ஒன்இந்தியா கூறியபடி, கலாம் பெயரால் எழுந்த, எழுந்துள்ள சர்ச்சைகளில் தலையிடாமல் தள்ளி நிற்க கலாம் குடும்பத்தினர் விரும்புகின்றனர். அதில் அவர்கள் தலையிடவும் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.
ஒரு மாத கால ஆலோசனை
அறக்கட்டளை தொடங்குவது குறித்து கலாம் குடும்பத்தினர் கடந்த ஒரு மாதமாக தங்களுக்குள் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். இதையடுத்து தற்போது அறக்கட்டளை இறுதி வடிவம் பெற்றுள்ளது.
ராமேஸ்வரம் தலைமையிடம்
இந்த அறக்கட்டளையானது ராமேஸ்வரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும். அறக்கட்டளையின் நிறுவனராக கலாமின் உறவினரான டாக்டர் நசீமா மரைக்காயர் செயல்படுவார்.
ஒருமனதான முடிவு
இதுகுறித்து டாக்டர் நசீமா மரைக்காயர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக கலாம் பெயரில் நடந்து வரும் அமைபப்புகள், தனி நபர்களின் செயல்பாடுகளை கவனித்து வந்தோம். தற்போது ஒரு குடும்பமாக அனைவரும் ஒருமித்த முடிவாக இந்த அறக்கட்டளை தொடங்குவது என்று முடிவெடுத்துள்ளோம்.
கலாம் கனவுகளை நிறைவேற்ற
டாக்டர் கலாம் கண்ட கனவுகளை இந்த அறக்கட்டளை நிறைவேற்றும் என்று நம்புகிறோம். சுய சார்புடைய நிகழ்ச்சிகளை நடத்தாமல், விளம்பர நோக்கில் நடத்தாமல் அனைவருக்கும் பலன் தரக் கூடிய வகையில் இது செயல்படும்.
சிறிய அளவில் ஆரம்பித்து
ஒரு விஞ்ஞானியாக டாக்டர் கலாம், தனது இலக்குகளை ஒரு சிறிய ராக்கெட்டிலிருந்து ஆரம்பித்து மிகப் பெரிய இடத்தை அடைந்தார். அதேபோல நாங்களும் சிறிய அளவில் ஆரம்பித்து படிப்படியாக செயல்படவுள்ளோம். அறக்கட்டளையின் இலக்குகள் விரைவில் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார்.
நாடு தழுவிய இயக்கம்
கலாமின் அண்ணன் பேரனும், சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான ஷேக் சலீம் கூறுகையில், இந்த அறக்கட்டளை நாடு தழுவிய இயக்கமாக மலரும் என்று தெரிவித்தார்.
நாட்டுக்காக உழைத்தவர் கலாம்
மேலும் அவர் கூறுகையில், டாக்டர் கலாம் தனது எந்த செயலுக்கும், சேவைக்கும் உரிமை கொண்டாடியதில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக சுயநலமில்லாமல், ஓய்வு இல்லாமல் பணியாற்றியவர். அறக்கட்டளையின் நிறுவனத் தலைவராக கலாமின் மூத்த சகோதரர் ஏபிஜேஎம் மரைக்காயர் செயல்படுவார் என்றார்.
அறக்கட்டளை உறுப்பினர்கள் யார் யார்?
அறக்கட்டளையில் சலீம், ஏபிஜேஎம் ஜெய்னுலாப்தீன், ஜி.கே. மொய்னுதீன், ஏபிஜேஎம்ஜே ஷேக் தாவூத், ஏபிஜேஎம்ஜேஎஸ் நாகூர் ரோஜா ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.