குளுகுளுவென தொடங்கியது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஒரு லட்சத்து 30 ஆயிரம் மலர்களால் ஆன சென்ட்ரல் ஸ்டேஷன்
நீலகிரி: உதகையில் 120 வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 68 அடி நீளம், 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்த ஆண்டு மலர்கண்காட்சியின் சிறப்பு என சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டு தோறும் கோடை காலத்தில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உதகை தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு 120-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி 3 நாள் நடக்கிறது.
இந்த ஆண்டில் சிறப்பம்சமாக 15,000 மலர்த் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி மலர்கள் உள்ளிட்ட 194 ரகங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
தொடக்கவிழா
உதகையில் 120-வது மலர்க் கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் துணைக்கண்ணு தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக அரசின் வேளாண்மைத் துறை செயலாளர் விஜயகுமார், தோட்டக்கலைத் துறை இயக்குநர் சித்திரசேனன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊட்டியில் சென்ட்ரல் ஸ்டேசன்
பார்வையாளர்களை கவரும் விதமாக பூக்களால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காரனேஷன் மலர்கள் பயன்படுத்தப்பட்டு, மணிகூண்டுடன் கூடிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்புறத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 68 அடி உயரத்திலும், 30 அடி அகலத்திலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, இரட்டைக்குருவி உருவம் ஒன்றும் மலர்களை கொண்டு
உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 10,000 காரனேஷன் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.
வெளிநாட்டு மலர்கள்
பூங்காவில் வைப்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டுள்ன. துலிப், கிரசாந்திமம், பிண்டுஷன் உள்ளிட்ட வெளிநாட்டு மலர்கள் காட்சி மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் நெதர்லாந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெர்பரா, காரனேஷன், லில்லியம் மற்றும் கிரசாந்திமம் உள்ளிட்ட பல்வேறு மலர் ரகங்களும் காட்சி மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன. காட்சி மாடத்தில் மட்டும் 15,000 மலர்த்தொட்டிகளும், புது பூங்காவில் 6,000 மலர்த் தொட்டிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
கட்டணம் எவ்வளவு
பூங்காவிற்கு செல்வோருக்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30-ம், சிறியவர்களுக்கு ரூ. 15-ம் வசூலிக்கப்படுகிறது. புகைப்படம் எடுக்க
விரும்புபவர்களுக்கு கேமரா கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதன்படி கேமராவிற்கு ரூ. 50-ம், விடியோ கேமராவிற்கு ரூ. 100-ம் கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இசை மற்று நடன நிகழ்ச்சி
பார்வையாளர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் பூங்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்க்காட்சியை கண்டுகளிக்க முடியும். முக்கியமாக இந்த 3 நாள்களிலும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் மலர் கண்காட்சி நடக்கும் மூன்று நாட்களும் இயக்கப்டுகின்றன.