போட்டியிடாததற்கு எதிர்கட்சிகள் கட்டவிழ்த்து விடும் பொய்யான கருத்துக்கள்.. ஜெயலலிதா புகார்..
சென்னை: ஆர்.கே. இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய எதிர்கட்சிகள், அதற்கு பொய்யான கருத்துக்களை பரப்பி வருவதாக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்ற அவர், காசி மேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரச்சாரத்தை தொடங்கினார்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் ஜெயலலிதா பேசியதாவது...
என்னை எதிர்த்து சி.பி.ஐ. தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அவர்கள் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், இதே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்கள் செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் பாராட்டி சட்டமன்றத்தில் பேசியுள்ளனர். அம்மா உணவங்கள் ஏழைகளுக்கு கிடைத்த வரப் பிரசாதம் என்று சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
சி.பி.ஐ. உறுப்பினர் குணசேகரன் பேசும்போது, எந்தவிதமான மனக்கவலையும் இல்லாமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கல்வி கற்க வைக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை, திட்டங்களை இன்றைக்கு பள்ளி கல்வியிலும், உயர் கல்வியிலும் அறிவித்து அறிய வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கின்றார் என்று என்னை பாராட்டி பேசியிருக்கிறார்.
இதுபோன்ற பல காரணங்களை என்னால் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் இன்று என்னை எதிர்த்து போட்டியிடுவதால் வேறுவழியின்றி எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
மற்ற எதிர்கட்சிகள் இடைத் தேர்தலில் போட்டியிடாததற்கு பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றன.
மக்களால் நான், மக்களுக்காவே நான் என்ற அடிப்படையில் நான் எப்போதும் செயலாற்றி வருகிறேன். எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உங்களுக்காகவே எப்போதும்போல் ஓயாது பாடுபடுவேன் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகின்ற பொதுதேர்தலுக்கு முன்னேட்டமாக அமையும் வகையில் உங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசினார்.