சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு: கூண்டோடு வெளியேறிய எதிர்கட்சிகள்
கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்தும், பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் பேச அனுமதிக்க மறுத்ததை கண்டித்து திமுக, பாமக, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கட்டிடம் இடிந்தது தொடர்பாக சட்டசபையில் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் பிறகு பேசிய மு.க.ஸ்டாலின் (தி.மு.க) எழுந்து, இன்னும் 2 நாள் தான் சட்டசபை இருக்கிறது. எனவே தி.மு.க. கொடுத்துள்ள கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார்.அது பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகர் தெரிவித்தார்.
அப்போது துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து வேலூர் அருகே கலெக்டர் கார் மோதி ஒரு வாலிபர் இறந்தது தொடர்பான பிரச்சினை பற்றி பேச தொடங்கினார். சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பேச அனுமதி மறுப்பு
சட்டசபையில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தற்போது சட்டசபையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டி உள்ளது. நாங்கள் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு, குடிநீர் பிரச்சினை, ரேஷன் கடையில் பருப்பு தட்டுப்பாடு, விவசாய அதிகாரி தற்கொலை, வேலூரில் ஆட்சியர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்து போன்ற பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்களை சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறோம்.
அது பற்றி பேச அனுமதி கேட்டால் அது ஆய்வில் இருக்கிறது என்று சபாநாயகர் கூறுகிறார். இன்னும் 2 நாட்கள் தான் சட்டசபை இருக்கிறது. எனவே, இது பற்றி பேச அனுமதி தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.
நீதி விசாரணை வேண்டும்
துரைமுருகன் கூறும் போது, ‘‘வேலூர் அருகே நடந்த விபத்தில் வாலிபர் ஒருவர் இறந்து விட்டார். இதற்கு மாவட்ட ஆட்சியர்தான் காரணம் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். இது பற்றி பேசவும் அனுமதி தரவில்லை. இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். பல்வேறு ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொடுத்தும் பேச அனுமதி தராதது கண்டிக்கத்தக்கது'' என்றார்.
மார்க்சிஸ்ட் - பாமக வெளிநடப்பு
சட்டசபையில் இன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் வெளிநடப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து பேசிய சவுந்தர் ராஜன் எம்.எல்.ஏ., நெல்லை வேளாண்மை அதிகாரி முத்துக்குமார் தற்கொலை குறித்து நடைபெறும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை திருப்தியாக இல்லை. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்கவில்லை. எனவே வெளி நடப்பு செய்தோம் என்றார். கணேஷ் குமார் எம்.எல்.ஏ. (பா.ம.க.) இதே பிரச்சினைக்காக வெளிநடப்பு செய்தார்.
கொம்பன் பிரச்சினை
எல்லாருக்கும் ஒரு பிரச்சினை என்றார் கொம்பன் பிரச்சினை பற்றி பேச டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) சட்டசபையில் பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி வழங்காததால் வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொம்பன் பட காட்சிகள் தென் மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தணிக்கை குழுவில் மனு கொடுக்க சென்றனர். அதை அவர்கள் ஏற்கவில்லை. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவதற்காக சபையில் பேச அனுமதி கேட்டேன். அதற்கு அனுமதி தரவில்லை. எனவே வெளிநடப்பு செய்தேன் என்றார்.
எதிர்கட்சிகள் இல்லாத சட்டசபை
ஏற்கனவே சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் பங்கேற்க வில்லை. இன்றைய தினம் சட்டசபையில் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்கட்சியினர் அனைவரும் இன்று வெளிநடப்பு செய்தனர். எனவே ஆளுங்கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களும் மட்டுமே இன்று சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.