நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட ஆளுநருக்கு அறிவுறுத்துங்கள்- ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
சென்னை: சட்டசபையை கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்தினர்.
ஜெயலலிதாவுக்கு பிறகு பிரிந்த அதிமுகவின் இரு அணிகளும் தற்போது இணைந்துவிட்டன. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணிக்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சரவையில் இடமும் கிடைத்தது. ஆனால் தினகரன் தரப்பு இதை ஏற்கவில்லை.
சசிகலாவை நீக்கும் நடவடிக்கைகயில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் நடவடிக்கையில் இறங்கியதால் தினகரன் தரப்பின் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்துத் தனித் தனியாக கடிதம் கொடுத்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்ததால் சிக்கல் எழுந்தது.
ஆதரவு வாபஸ்...
தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் ஆளுநரை கடந்த வாரம் சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவருக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்றும் முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த முடிவில் அவர்கள் கடந்த 8 நாள்களாக உறுதியாக இருந்து வருகின்றனர்.
சட்டசபையை கூட்ட...
19 எம்எல்ஏ-க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக இல்லாத காரணத்தால் சட்டப்படி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதையடுத்து திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளுநரை சந்தித்தனர். சட்டமன்றத்தை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
ஆளுநர் நடவடிக்கை இல்லை
ஆனால் 8 நாட்கள் கழித்தும் ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளான திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால் அதிமுகவின் 19 எம்எல்ஏ-க்களும் வேறு கட்சிக்கு போகவில்லை. மேலும் முதல்வரை மாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவர்களது கோரிக்கையாக உள்ளதால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அறிவிக்க இயலாது. அதிமுக எம்எல்ஏக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து விட்டதால் அது அவர்களின் உள்கட்சி பிரச்சினையாகிவிட்டது. இதில் நான் தலையிடவும் முடியாது என்று ஆளுநர் கைவிரித்துவிட்டார்.
டெல்லியில் எதிர்க்கட்சிகள்
இதனால் இன்று திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஎம் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு டெல்லியில் ஜனாதிபதி ராம் கோவிந்தை இன்று சந்தித்தனர். அந்த குழுவில் திமுகவின் கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா, ஆர்எஸ் பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸின் ஆனந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இச்சந்திப்பின் போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.