3 மாதத்துக்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்.. பொதுமக்கள் கிணற்றை பயன்படுத்த ஓபிஎஸ் ஒப்புதல்!
தனக்கு சொந்தமான கிணற்றில் 3 மாதங்களுக்கு பொதுமக்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்துள்ளார்.
தேனி: தனக்கு சொந்தமான கிணற்றில் 3 மாதங்களுக்கு பொதுமக்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான தோட்டத்தில் மெகா கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக கடந்த 20 நாட்களாக கிராம மக்கள் சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பிரச்னைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக கிராம மக்களுடன் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேற்றிரவு தேனி சுற்றுலா மாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 40 ஏக்கர் நிலத்தை விற்க ஓ.பி.எஸ். முடிவு செய்ததாக தெரிகிறது. மேலும் அந்தக் கிணற்றையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கவும் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார்.
Recommended Video
இதற்காக 3 மாத கால அவகாசம் அவர் கேட்டுள்ளார். அந்த 3 மாதம் வரையும் கிணற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் ஓபிஎஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கிராம மக்களிடம் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
லட்சுமிபுரம் மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது ஓ.பிஎஸ் தரப்பு இந்தத் தீர்வைத் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக லட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டுள்ளனர்.