சசிகலாவை மட்டும்தான் ஜெ. மீண்டும் சேர்த்தார்.. மற்றவர்களை இல்லை.. ஓபிஎஸ்
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் சசிகலாவை மட்டும்தான் ஜெயலலிதா மீண்டும் சேர்ந்தார். மற்றவர்களை இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை ஆர்.கே. நகரில் இன்று கொண்டாடிய ஓபிஎஸ், சசிகலாவை மட்டும்தான் ஜெயலலிதா கட்சியில் மீண்டும் சேர்ந்தார் என்றும் அவரது குடும்பத்தாரை சேர்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆர். கே. நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தங்கள் அணியில் இருப்பவர்கள்தான் உண்மையான அதிமுகவினர் என்று கூறினார். மேலும், கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தினர் முற்றிலுமாக நீக்கப்பட்டனர் என்றும் அவர்களில் சசிகலாவை மட்டும் மீண்டும் ஜெயலலிதா சேர்த்துக் கொண்டார் என்று ஓபிஎஸ் கூறினார்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத டிடிவி தினகரன் கட்சியின் பொறுப்பிற்கு வர முடியாது என்றும் அவரது அழைப்பு ஆச்சர்யத்தை அளித்துள்ளது என்றும் ஓபிஎஸ் கூறினார். பொதுச் செயலாளர் பதவியில் உட்கார யாருக்கும் தகுதி இல்லை என்றும் முறைப்படி தேர்தல் நடத்தினால்தான் பொதுச் செயலாளர் தேர்வு செல்லும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மூத்த தலைவர் மதுசூதனன், பொன்னையன், கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக, ஆர். கே. நகரில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை ஓபிஎஸ் வழங்கினார்.