வழக்கில் இருந்து விடுதலையாக ராமேஸ்வரத்தில் பரிகார பூஜை செய்த ஓபிஎஸ் தம்பி
ராமேஸ்வரம்: செய்த பாவங்கள் போக ராமேஸ்வரத்தில் வந்து புனித நீராடி ராமநாதஸ்வாமியை வணங்குவார்கள். தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பூசாரி தற்கொலை வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டி
ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தங்களில் நீராடி, சிறப்பு பூஜைகள் செய்தார்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முதல் குற்றவாளியாக ஓ.ராஜா சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கு நியாயமாக நடக்க வேண்டும் என்று நாகமுத்துவின் பெற்றோர் கோரிக்கை வைத்ததால், வழக்கு தேனி மாவட்டத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டது.
மந்தகதியில் நடந்து வந்த அந்த வழக்கில், அரசின் சிறப்பு வழக்கறிஞராக மோகன் வந்தபின் வழக்கு வேகமெடுத்துள்ளது. அதே சமயம், ஆரம்பத்தில் வழக்கு பதிய தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகளையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று நாகமுத்து பெற்றோர் தரப்பு தாக்கல் செய்த மனு, கடந்த சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனினும் இந்த வழக்கின் தீர்ப்பு தனக்கு எதிராக வந்துவிடும் என்று அச்சப்படும் ஓ.ராஜா, வழக்கிலிருந்து விடுபட ராமேஸ்வரம் கோயிலில் பாவம் தீர்க்க தீர்த்தங்களில் நீராடி, சிறப்பு பூஜைகள் செய்தார். இவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் நேரம் என்பதால் கட்சி முக்கிய புள்ளிகள் யாரும் இவர் வருகையை கண்டு கொள்ளவே இல்லை.
இதற்கு முன் பல முக்கிய புள்ளிகள், வழக்கில் இருந்த விடுபட ராமேஸ்வரம் வந்து பூஜை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.