ஏழைப்பங்காளனே! போஸ்டர் ஒட்டியவரின் தாய் போலீசில் புகார்...கொலை மிரட்டல் வருவதாக குற்றச்சாட்டு
சென்னை ராயபுரம் மற்றும் வடசென்னை தொகுதியில் நிதியமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராகபோஸ்டர் ஒட்டியவருக்கு மிரட்டல் வருவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை ராயபுரம் தொகுதியில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தேவதாசுக்கு கொலை மிரட்டல் வருவதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அமைச்சர் ஜெயகுமார் தொகுதி மேம்பாடு மற்றும் மீனவர் நலனில் அக்கறை கொள்ளாததை கண்டித்து நேற்று அவரின் சொந்த தொகுதியான ராயபுரம் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த போஸ்டரில் 'சொந்த பங்களாவில் சகல வசதிகளுடன் வசித்து வரும் ஏழைப்பங்களானே!... சொந்த மகனை சசிகலா உதவியால் எம்.பியாக்க உன்னால்...உனக்காக 26 ஆண்டுகளாக உழைத்த எந்த மீனவ மக்களை உயர்த்தியுள்ளாய்?" என்று கேள்வி எழுப்பும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. போஸ்டர்களைக் கண்டு பயமில்லை என்று நிதியமைச்சர் ஜெயகுமார் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் குண்டர்களை ஏவி கொலை மிரட்டல் விடுப்பதாக போஸ்டர் ஒட்டிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு அணியை சேர்ந்த தேவதாஸின் தாயார் சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
நிதியமைச்சர் ஜெயகுமார் தனது பலத்தை பயன்படுத்தி போலீசாரை தூண்டிவிட்டு பொய் வழக்குகள் போடுவோம் என்று தொடர்ந்து மிரட்டுவதோடு, தொடர்ந்து தொல்லைகளை ஏற்படுத்தி வருவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ராஜம்மாள் கொடுத்துள்ள புகாரில் காரணமேயின்றி தன்னுடைய பேரன் எபினேசரை பிடித்து சென்றுள்ளதோடு தேவதாஸ் வரும் வரை தன்னுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மீது பொய் வழக்கு போடுவோம் என்று போலீசார் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயகுமார் தூண்டுதலின் பேரில் செயல்படும் குண்டர்கள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டவிரோத காவலில் உள்ள எபினேசரை விடுவிக்க வேண்டும் என்றும் மனுவில் ராஜம்மாள் கோரியுள்ளார்.