ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிய எடப்பாடி பழனிச்சாமி! விரைவில் இணைகிறதா அணிகள்?
ஓபிஎஸ் அணியினர் கோரிய இரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுவதற்கான சூழலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்து கொடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் இரு கோரிக்கைளும் நிறைவேற்ற அறிவித்திருப்பதன் மூலம் அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு முதல்வர் வித்திட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் முதல்வராக வேண்டும் என்று எண்ணிய சசிகலா, முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தை பதவி விலகுமாறு நிர்பந்தித்தார். இதைத் தொடர்ந்து பதவி விலகிய ஓபிஎஸ் திடீரென ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார்.
அதைத் தொடர்ந்து அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ். இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இணைப்பு முடிவு
இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறை சென்றார். இந்நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க இரு அணிகளும் இணைய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
2 கோரிக்கைகள்
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றால் 2 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் நிபந்தனை விதித்தனர். அதாவது சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து நீக்குவது, ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது ஆகியவைதான் அந்த கோரிக்கைகள்.
இழுபறி
சசிகலா, அவரது குடும்பத்தினரை நீக்குவதில் எடப்பாடி அணியினர் ஒரு முடிவை எடுக்கவில்லை. அதேபோல் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரிக்கையிலும் எடப்பாடி அணியினர் மாற்றுக் கருத்துகளை கூறிவந்தனர். இதனால் அதிமுக இணைப்பில் இழுபறி நிலவியது.
சசிகலா, தினகரனை ஒதுக்கி..
அதிமுகவின் நலன் கருதி சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைப்பது என்று எடப்பாடி அணியினர் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமனம் செல்லாது என்று தீர்மானமும் கொண்டு வந்தனர்.
ஒரு கோரிக்கை நிறைவேறியது
எடப்பாடி அணிக்கும், தினகரன் அணிக்கும் போர் முற்றி வரும் நிலையில், முதல் கோரிக்கை நிறைவேறி விட்டது. எங்களது இரண்டாவது கோரிக்கையான ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணை அமைத்து விட்டால் வெகு விரைவில் இரு அணிகளும் அணியும் என்று ஆவடி எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன் நேற்று தெரிவித்திருந்தார்.
Recommended Video
முதல்வர் அறிவிப்பு
இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்ததுள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ் அணியினரை முதல்வர் திருப்திப்படுத்திவிட்டார். முதல்வரின் அறிவிப்பை ஒபிஎஸ் அணியினர் திருப்தி அடைந்தால் வெகு விரைவில் அணிகள் இணைப்பு சாத்தியமாகும் என்பதில் சந்தேகம் இல்லை.