கிணற்றை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு தனியாருக்கு விற்ற ஓபிஎஸ்- மீண்டும் போராடும் லட்சுமிபுரம்!
பெரியகுளம் அருகே தனக்கு சொந்தமான கிணற்றை மக்களுக்கு இலவசமாக கொடுப்பதாக அறிவித்துவிட்டு பின்னர் அதற்கு முந்தைய நாளில் அந்த கிணற்றையும், நிலத்தையும் தனியாருக்கு விற்று மக்களை ஓபிஎஸ் ஏமாற்றிவிட்டதாக புகா
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 200 அடி ஆழ ராட்சத கிணற்றை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுப்பதாக தெரிவித்துவிட்டு அதற்கு முந்தைய நாளில் அந்த கிணற்றை வேறு நபருக்கு விற்றதன் மூலம் மக்களை ஓ.பன்னீர் செல்வம் ஏமாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. நீர் ஆதாரங்களான விளங்கிய ஏரிகளும் வறண்டு விட்டன.
மக்கள் போராட்டம்
இதனால் மக்கள் அன்றாடம் காலி குடங்களுடன் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. மேலும் தண்ணீர் பஞ்சத்தை போக்காத தமிழக அரசைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டமும் நடைபெற்று வருகிறது.
ராட்சதச கிணறு
இதனிடையே தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரம் கிராம மக்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான ராட்சத கிணற்றால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த கிணற்றை ஒப்படைக்க வேண்டி கிராம மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஏமாற்றிய ஓபிஎஸ்
இதையடுத்து கிணற்றை கிராம மக்களுக்கு அன்பளிப்பாக தரவிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர் வாக்குறுதி அளித்ததற்கு முந்தைய நாளே கிணறு மற்றும் நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு ஓபிஎஸ் விற்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
மீண்டும் போராட்டம்
இதனால் கிணற்றை கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று லட்சுமிபுரம் கிராம மக்கள் இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பை சமாளிக்க கிணற்றை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு அதை வேறு ஒருவருக்கு எழுதி வைத்ததது தந்திரம் என்று கிராமமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.