செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 29,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது.. ஓ. பன்னீர் செல்வம்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், 29 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாகவும் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடரில் இரண்டாவது நாளில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டு இரண்டு நிமிட நேர மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு முக்கியமான இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக 2015 ம் ஆண்டு பெரும் மழையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் ,மறைந்த பழம் பெரும் நடிகை மனோரமாவுக்கும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் முக்தி முகம்மது சையத், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் உள்ளிட்டவர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு கேள்வி நேரம் தொடங்கியதும் பட்டுக்கோட்டை தொகுதி சட்டசபை உறுப்பினர் கேட்ட முக்கியமான கேள்விக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்தார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைப்பதில் சிக்கல்கள் நீடிப்பதாகவும், சிக்கல் இல்லாத இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தடையை நீக்குவது குறித்து சட்ட சபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதனை கண்டித்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பின்னர், சில நிமிடங்களுக்கு பிறகு திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.
மழையின்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்தது தொடர்பாக தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். அப்போது, எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், 29 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகபட்சமாக 33060 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியும் என்று கூறிய அவர், வெள்ளநீர் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி 2 அடி குறைவாகவே நீர் தேக்கி வைக்கப்பட்டது. பிற ஏரிகளைப்போன்று செம்பரம்பாக்கம் ஏரி நீர்பாசன தேவைக்கான ஏரி அல்ல. இந்த ஏரியைத் திறக்க முதல்வரின் உத்தரவு அவசியமில்லை. தேர்தலை மனதில் வைத்து தி.மு.க.வினர் தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்" என்றும் பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார்.