நாங்க பாஸ்... நீங்க ஃபெயில் எதிர்கட்சியினரை அட்டாக் செய்த ஓபிஎஸ்
சென்னை: காரசாரமாக நடக்கும் சட்டசபை விவாதத்தில் அவ்வப்போது சிரிப்பொலியும் கேட்பதுண்டு. சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி பேச்சும், அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் பதிலும் அமளி துமளிக்கு இடையே சற்றே ஆசுவாசத்தை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும்.
கே.ஆர். ராமசாமி: சட்டசபை தேர்தல் தொடர்பாக சில புள்ளி விவரங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தத் தேர்தலில் அதிமுக 1.76 கோடி வாக்குகளையும், திமுக - காங்கிரஸ் கூட்டணி 1.75 கோடி வாக்குகளையும் பெற்றன. சதவிகிதப்படி பார்த்தால், அதிமுக 40.8 சதவிகிதத்தையும், திமுக அணி 39.7 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன. இரண்டுக்குமான வித்தியாசம் 1.1 சதவிகிதம்தான் என்று பேசினார்.
ராமசாமியின் இந்தக் கருத்துக்கு, திமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம்: உடனே எழுந்து... சட்டசபை தேர்தலில் நாங்கள் அதிக சதவிகிதம் எடுத்து பாஸ் பண்ணியுள்ளோம். நீங்கள் ஃபெயில் ஆகியுள்ளீர்கள் என்றார். ( இதற்கு ஆளுங்கட்சியினர் மேஜையை தட்டினர்)
ஆளுங்கட்சியினர் மேஜையை தட்டினாலும் ஓபிஎஸ் சொன்ன பதிலால் அனைவருமே சிரித்தனர். இந்த பதிலால் சற்றே பேச்சை நிறுத்திய ராமசாமி பின்னர் சமாளித்த ராமசாமி பேச்சை தொடர்ந்தார்.
ராமசாமி: அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதனால்தான், நாங்கள் இங்கே (எதிர்க்கட்சி வரிசையில்) உட்கார்ந்திருக்கிறோம். நீங்கள் அங்கே (ஆளும்கட்சி வரிசையில்) அமர்ந்து இருக்கிறீர்கள் என்று முடிக்கவே ஆளுங்கட்சியினர் முகத்தில் புன்னகை பூத்தது.