இணைந்த ஒபிஎஸ்- ஈபிஎஸ்... அண்ணா, எம்ஜிஆர், ஜெ. சமாதியில் ஒன்றாக அஞ்சலி
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து வந்து அஞ்சலி செலுத்தினர். நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்ததால் மெரீனா கடற்கரை சாலை ஸ்தம்பித்தது.
6 மாதத்திற்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்தித்து கை குலுக்கி கூட்டாக இணைப்பை அறிவித்தனர்.
அதிமுகவை வழிநடத்தும் வழிகாட்டுதல் குழுவிற்கு ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும், கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் இணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் நிதியமைச்சராகவும் துணை முதல்வராகவும் பொறுப்பேற்பார். மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பதவி அளிக்கப்படும். நிதியமைச்சராக இருந்த ஜெயக்குமார் வீட்டுவசதித்துறை அமைச்சராக பதவியேற்கிறார் என்று ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகைக்கு செல்லும் முன்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது ஜெயலலிதா சமாதியில் 3முறை மண்டியிட்டு வணங்கினார் ஓ.பன்னீர் செல்வம்.