மாத்தி மாத்தி பேசும் இபிஎஸ் அணி, கடுப்பில் ஓபிஎஸ் அணி: இரு அணிகளும் சேருமா?
சென்னை: இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறுபட்ட கருத்துகளை கூறி வருவதால் இரு அணிகளை இணைப்பதில் பிரச்சனை எழுந்துள்ளது.
அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணியாக உடைந்தது. தற்போது சசிகலா அணியில் இருந்து இபிஎஸ் அணி தனியாக வந்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் சேர பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள்.
முதல்வர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் கேட்டுள்ளார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியோ அந்த பதவிகளை அளிக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
வெற்றி
சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை ஓபிஎஸ் அணி முன்வைத்துள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்தார். இதை பார்த்த ஓபிஎஸ் இது எங்களின் தர்மயுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.
ஜெயக்குமார்
இபிஎஸ் அணியில் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமாரோ விட்டால் அமெரிக்காவில் டிரம்ப் என்னால் தான் வெற்றி பெற்றார் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறுவார் என்றார். இதை கேட்டு ஓபிஎஸ் அணி கடுப்பானது.
தம்பிதுரை
மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை கூறுகையில், முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி தான் நீடிப்பார். அவர் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளவர் என்றார்.
வைத்திலிங்கம்
அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கூறுகையில், ஜெயலலிதா மரணம் அடைந்தபோது ஓ. பன்னீர்செல்வம் தானே முதல்வராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் அப்பொழுதே நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே என்று கேட்டார்.
பிரச்சனை
எடப்பாடி அணியினர் தெரிவித்து வரும் கருத்துகளால் ஓபிஎஸ் அணியினர் எரிச்சலில் உள்ளனர். இதனால் இரண்டு அணிகளையும் இணைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.