குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு.. ஓ.பி.எஸ் அணி அதிரடி முடிவு
சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளிக்க அதிமுகவின், ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய ஜனாதிபதியாக பாஜக ஒரு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் அக்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பன்னீர்செல்வம் அணியினர் பாஜகவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர். டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
நேரம் கிடைத்து பிரதமரை சந்திக்கும்போது மோடியிடம் தனது ஆதரவை பன்னீர்செல்வம் தெரிவிப்பார் என கூறப்படுகிறது. 12 எம்.பிக்கள் பன்னீர் செல்வம் பக்கம் உள்ளனர்.
மோடியின் மனதை குளிர்விக்கும் வகையில் இந்த நடவடிக்கையை பன்னீர்செல்வம் எடுப்பார் என கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், எடப்பாடி பழனிச்சாமியும் தனது ஆதரவு எம்.பிக்களை பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வைப்பார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்டபோது, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தனது முடிவை அறிவிப்பதாக கூறினார்.