எடப்பாடி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது.. தென் ஆப்பிரிக்காவை சுட்டிக்காட்டிய ஓபிஎஸ் தரப்பு!
நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்தக் கூடாது என்ற தென் ஆப்பிரிக்கா நீதிமன்றத்தீர்ப்பை சுட்டிகாட்டி ஓபிஎஸ் அணி உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபையில் நடந்த ரகசிய வாக்கெடுப்பு தவறு என்று தென் ஆப்பிரிக்கா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எடுத்துக்காட்டி ஓபிஎஸ் அணி உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளது.
சென்னை சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெற்ற வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது காரசாரமான விவாதம் நடந்தது.
தென் அமெரிக்கா
மத்திய அரசு தரப்பில் வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட வாய்ப்பில்லை என்றார். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் தென் ஆப்பிரிக்கா அதிபர் ஜேகப் ஷூமா தேர்வு செய்யப்பட்ட போது அந்த நாட்டு நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டினார்.
வழக்கு
தமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு முறையாக நடத்தப்படவில்லை, மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டதாகவும், இதனால் அதை செல்லாது என அறிவிக்க கோரிய பன்னீர் செல்வம் அணியின் மாஃபா பாண்டியராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விசாரணை
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், அமர்வு முன்பு நடைபெற்ற வாதத்தின் போது ஓபிஎஸ் அணி தங்களுக்கு சாதகமாக இந்த சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் கூறியுள்ளனர். இது மாதிரியான தருணங்களில் வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்துவதும், சபாநாயகரின் தேர்வுகளை சரிபார்க்கவும் அமைப்பு தேவைப்படுவதாகவும்
வாதத்தின் போது கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஒத்தி வைப்பு
இதனையடுத்து இந்தப் புகார் குறித்து அரசு தரப்பு பதில் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம். மேலும் வழக்கை ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.