தேர்தல் ஆணைய பிரமாண பத்திரத்தில் தினகரன் பெயரை நீக்குங்க- எடப்பாடிக்கு ஓபிஎஸ் அணி புதிய செக்!
தேர்தல் ஆணைய பிரமாண பத்திரத்தில் தினகரன் பெயரை வாபஸ் வாங்குங்க என எடப்பாடி கோஷ்டிக்கு ஓபிஎஸ் அணி புது செக் வைத்துள்ளது.
சென்னை: தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தினகரன் துணைப் பொதுச்செயலர் என்பதை நீக்க வேண்டும் என ஓபிஎஸ் அணி புதிய நெருக்கடி கொடுப்பதால் எடப்பாடிக்கு அணிக்கு இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
அணிகள் இணைப்புக்காக மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது எனத் தொடர்ந்து பேசி வருகின்றனர் அமைச்சர்கள் சிலர். இதற்குப் பதில் கொடுக்கும் ஓபிஎஸ்ஸோ, பேச்சுவார்த்தை நடக்கிறது என அமைச்சர்களே கேள்வி, பதில்களை வெளியிடுகின்றனர். அப்படி எந்த அழைப்பும் நேரடியாக எங்களுக்கு வரவில்லை எனத் தெளிவாகக் கூறிவிட்டார்.
இப்படியே இணைப்பு என்று கூறிக் கொண்டே நான்கு ஆண்டுகளைக் கடத்தி விடுவார்களோ' என்ற அச்சம் ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது அணிகள் இணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் விரும்பினாலும், கொங்கு அணியின் தூண்டுதலில் பேச்சுவார்த்தை தாமதமாகிக் கொண்டே வருகிறது.
வாபஸ் வாங்குக
ஓபிஎஸ் அணியை வளரவிடுவதில் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லை. ஓபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமி பேசும்போதெல்லாம், எங்களிடம் பேச்சுவார்த்தை என சொல்லிக் கொண்டே பிரமாண பத்திரத்தில், சசிகலாவையும் தினகரனையும் முன்னிறுத்துகின்றனர். இப்படி இருந்தால் அணிகள் எப்படி இணையும் எனக் கேள்வி எழுப்புகிறார்.
ஓபிஎஸ் கை ஓங்கும்
தேர்தல் ஆணைய பிரமாண பத்திரத்தில் தினகரன் துணை பொதுச்செயலர் அல்ல என எழுதிக் கொடுத்தால் கட்சியின் பொருளாளராக ஓபிஎஸ்ஸும் அவைத் தலைவராக மதுசூதனும் பழையபடியே நீடிப்பார்கள். சசிகலாவால் நியமனம் செய்யப்பட்டவர்களின் பதவிகளும் செல்லாது.
ஓபிஎஸ் முதல் எதிரி
கட்சியின் பொதுக் குழுவை ஓபிஎஸ்ஸால்தான் கூட்ட முடியும். ஆனால் சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதைவிட, ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டுவதைத்தான் எடப்பாடி விரும்புகிறார். தன்னுடைய இரண்டாவது எதிரியாகத்தான் தினகரனை நினைக்கிறாராம்.
துணை முதல்வர் கூட ஆகட்டுமே
கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்த ஓபிஎஸ் வந்துவிட்டால், இரண்டாம் இடத்தை நோக்கி நகர வேண்டியது இருக்கும் என எடப்பாடி நினைக்கிறாராம். துணை முதல்வர் பதவியை மட்டும் பெற்றுவிட்டு, பழையபடி கட்சிப் பணியை ஓபிஎஸ் செய்யட்டும்' என எதிர்பார்க்கிறார் எடப்பாடி.
கொங்கு மண்டலம்
பொதுச் செயலாளர் உள்பட முக்கிய பதவிகளை கொங்கு மண்டலம் ஆள வேண்டும் என்பதுதான் அமைச்சர்களின் சிலரின் விருப்பமும். இதற்கு ஓபிஎஸ் ஒத்துழைக்காததால்தான், பேச்சுவார்த்தை தொடக்க நிலையிலேயே இருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.