அலங்காநல்லூர் மக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டு.. தோல்வி முகத்துடன் ஓ.பி.எஸ் பேட்டி
அலங்காநல்லூர் மக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டை நடத்திக் கொள்ளட்டும் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.தடை நீக்கப்பட்டுவிட்டதால் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதுரை: ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் நிரந்தரமாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு இன்று நடந்துவிட்டதாகவும், அலங்காநல்லூரில் மட்டும் அப்பகுதி பெருமக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒரு வாரமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நேற்று தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்றியது. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு கடுமையான எதிர்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. நிரந்தரச் சட்டம் ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் சென்னை, அலங்காநல்லூர், திருச்சி, திண்டுக்கல், நாகை என பல மாவட்டங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு முயற்சிகளை எடுத்த ஓபிஎஸ், பெரும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். இந்நிலையில், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று டெல்லி வரை சென்று அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இந்தச் சட்டத்தை நிரந்தரமாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், இந்த அவசரச் சட்டம் நிரந்தரமானது.
அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. ஆனால் அலங்காநல்லூரில் மட்டும் நடக்கவில்லை. இந்த ஊர் பெருமக்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது ஜல்லிக்கட்டு நடத்தட்டும் என்று கூறினார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத ஏமாற்றத்தோடு மதுரையில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். மக்கள் போராட்டம் வென்றுள்ளதை இது காட்டுகிறது.