இன்று ஸ்டாலினுடன்... அன்று அழகிரியுடன் ஓபிஎஸ்-க்கு தொடர்பு... 'செங்ஸ்' போடும் புது குண்டு
அழகிரியுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஓ.பன்னீர்செல்வத்தின் பொறுப்புகளை 2006ஆம் ஆண்டு ஜெயலலிதா பறித்தார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிபாளையம்: அழகிரியுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஓ.பன்னீர்செல்வத்தின் பொறுப்புகளை 2006ஆம் ஆண்டு ஜெயலலிதா பறித்தார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் உறவினர்களின் பதவிகளையும் அவர் பறித்தார் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோபிச்செட்டிபாளையத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு அதிமுகவை அழிக்கத் திட்டமிடுவதகாவும் அவர் கூறினார். அவர் மேலும் பேசியதாவது, "கோபிச்செட்டி பாளையம் தொகுதியிலிருந்து 8 முறை எம்.எல்.ஏவாகி உள்ளேன்.
மாறாமல் இருந்து வருகிறேன்
1972ம் ஆண்டு அண்ணா தி.மு.கவை எம்.ஜி.ஆர். துவக்கிய காலத்திலிருந்தே நான் எந்த அணிக்கும் மாறாமல் இருந்து வருகிறேன். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, ஏன் அவர் படத்தை வெளியிடவில்லை என்று பலர் கேட்கிறார்கள்.
கருணாநிதி பொய் பிரச்சாரம் செய்தார்
எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சைபெற்ற போது அவர் மறைந்து விட்டார் என கருணாநிதி பொய் பிரச்சாரம் செய்தார். அதனால் அந்த படம் வெளியிடப்பட்டது.
படம் வெளியிட மாட்டார்கள்
ஆனால் எம்.ஜி.ஆர். இதை விரும்பவில்லை. ஒரு கட்சியின் தலைவர் சிகிச்சை பெறும் போது அவரது படத்தை யாரும் வெளியிட மாட்டார்கள்.
அதிமுகவை அழிக்க திட்டமிடுகிறார்
ஓ. பன்னீர்செல்வம் தி.மு.கவோடு கைகோர்த்து கொண்டு அதிமுகவை அழிக்க திட்டமிடுகிறார். இவருடைய திட்டம் ஒருபோதும் நடக்காது.
ஓபிஎஸ் பொறுப்புகளை பறித்த ஜெ
2006ம் ஆண்டு கருணாநிதியின் மகன் அழகிரியோடு தொடர்பு வைத்திருந்ததை ஜெயலலிதா அறிந்து ஓபிஎஸ்-ன் பொறுப்புகள், அவருடைய உறவினர்களின் பொறுப்புகளை பறித்தார்.
சரியான முறையில் நம்பிக்கை வக்கெடுப்பு
சட்டசபையில் இதுவரையிலான நம்பிக்கை வாக்கெடுப்பு அனைத்தும் குரல் ஓட்டாகவும் எழுந்து நின்று தெரிவிப்பது போன்றும் தான் இருந்தது. தற்போது சபாநாயகர் தனபால், சரியான முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி உள்ளார்." இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.