அம்மாவுக்கு சுகவீனம்.. கோவையில் சிகிச்சை.. சோகத்தில் ஓ.பி.எஸ்.. வரவேற்க வராத தொண்டர்கள்!
கோவை: நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். இவரது தாயார் பழனியம்மாள், வயது 83. உடல் நலம் பாதிக்கப்பட்ட பழனியம்மாளுடன் அமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.
ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பழனியம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் பன்னீர் செல்வம் தனது தாயார் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். பின்னர் நேற்று இரவு 11.50 மணி அளவில் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். பழனியம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐவரணியில் முதல்வராக வலம் வந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது கட்சித்தலைமையால் ஓரம்கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வருகின்றனர். இதுவே ஓ.பன்னீர் செல்வத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது தயாரின் உடல்நிலை பாதிப்பும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.