அதிருப்தி எம்எல்ஏக்களை அலேக்காக வளைக்கும் ஓபிஎஸ் டீம் - அதிர்ச்சியில் ஈபிஎஸ்
ஈபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களை குறிவைத்து காய் நகர்த்துகிறது ஓபிஎஸ் டீம்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களை கொத்தாக அள்ளச் சொல்லியிருக்கிறாராம் ஓ.பன்னீர் செல்லம். இதற்காக ஒரு ரகசிய அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறாராம்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று நூறு நாட்கள் ஆகப்போகிறது. அதை கொண்டாடும் மனநிலையில் அவர் இல்லை. காரணம் அவருக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களை தரும் நெருக்கடிதான்.
செந்தில்பாலாஜி ஒரு டீம் எம்எல்ஏக்களோடு போய் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு கொடுத்து விட்டு வர, மறுநாளே கே.எஸ்.தென்னரசு , ஆர்.சந்திரசேகர், கே.உமாமகேஸ்வரி , ஐ.எஸ்.இன்பதுரை, தமிழ்செல்வன் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் மனு கொடுத்துள்ளனர்.
நெருக்கடி
எம்எல்ஏக்கள் தங்களது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தனர் என்று சொன்னாலும் கூவத்தூர் ரிசார்ட்ஸ்சில் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தவே இந்த சந்திப்பு என்று கூறுகின்றனர்.
கொண்டாட்டமில்லை
எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள் அமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை கேட்பதால் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் அதிமுக அரசின் ஓராண்டு நிறைவு விழாவைக்கூட உற்சாகமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைவது கூட அவருக்கு உற்சாகத்தை தரவில்லை.
கெடு விதித்த செந்தில் பாலாஜி
எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும், ஒரு வாரம் உங்களுக்கு டைம் கொடுக்குறோம். அதுக்குள்ள நல்ல பதிலா சொல்லுங்க என்று கெடு வைத்தார் செந்தில் பாலாஜி. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார்.
நடிகர் கருணாஸ் சந்திப்பு
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் திருவாடணை தொகுதி எம்எல்ஏவான நடிகர் கருணாஸ் சந்தித்துப் பேசினார். சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசிய கருணாஸ், தற்போது முதல்வரை சந்தித்துப் பேசியது பல சந்தேகங்களை எழுப்பியது.
வைகை செல்வன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், அதிமுக அம்மா அணி கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வனுக்கும் ஏழாம் பொருத்தம். எத்தனையோ தகிடுதத்த வேலைகளை செய்து வைகை செல்வனை சட்டசபைக்குள் நுழைய விடாமல் செய்து விட்டார். இப்போது தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 6 பேருடன் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறாராம் வைகைச்செல்வன்.
தொகுதி பிரச்சினை
அந்தக் கூட்டத்துக்கு வந்த தென் மாவட்ட எம்.எல்.ஏக்களும், நீங்க சொல்றதுக்கு நாங்க கட்டுப்பட தயாரா இருக்கோம். என்று சொன்னார்களாம். தங்கள் தொகுதி பிரச்னை பற்றி பேச வைகைச்செல்வன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆபரேசன் அதிருப்தி எம்எல்ஏக்கள்
யார் யார் அதிருப்தியில் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் தங்கள் வசப்படுத்த புது ஆபரேசனை துவக்கியுள்ளனர் ஓபிஎஸ் அணியினர். கே.பி முனுசாமி, செம்மலை ஒரு அணியாகவும், மாஃபா பாண்டியராஜன் தலைமையில் மற்றொரு அணியும் களமிறங்கியுள்ளனர்.
ரகசிய உத்தரவு
இதுதான் சரியான நேரம். விட்டுடக் கூடாது. நம்ம ஆபரேசன் ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும் என்று சொல்லியிருக்கிறாராம். எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு முன்பாகவே ஆபரேசன்கள் அரங்கேறிவிடும் என்கின்றனர். இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? தமிழக மக்கள் இன்னும் எத்தனை கூத்துக்களை பார்க்கப் போகிறார்களோ?