அதிமுக அணிகள் இணைப்பில் சிக்கல்... தமிழகம் முழுவதும் மே 5 முதல் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில் ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். மே 5ம் தேதி காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை ஓ.பி.எஸ். தொடங்க இருக்கிறார்.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.
இரு அணியினரும் மாறு பட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் உருவாகவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் சேலம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் இரு அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசும்போது, 90 சதவீத நிர்வாகிகள் தம்மிடம் இருப்பதாகவும், அதனால் எந்த கொம்பனாலும் கட்சியையும், ஆட்சியையும் அசைக்க முடியாது. பேச்சு வார்த்தைக்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்று கூறியதை அடுத்து இணைப்புக்கான பேச்சு வார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஓபிஎஸ் அணி முடிவு
ஓபிஎஸ் அணியினர் அடுத்தக்கட்ட நட வடிக்கையை தொடங்கிவிட்டனர். இணைப்புக்கான சாத்தியம் தற்போது இல்லாத சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கப் போகிறார்.
தொண்டர்களுடன் சந்திப்பு
காஞ்சிபுரம் முதல் கன்னியாகுமரி வரை தொண்டர்களை சந்திக்கும் ஓபிஎஸ், மாவட்டம் வாரியாக ஊழியர்கள் கூட்டத்தை நடத்தி அணிக்கு மேலும் வலு சேர்க்க உள்ளார். 32 மாவட்டங்களுக்கும் செல்லும் ஓபிஎஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர் களை சந்தித்து பேசுகிறார்.
வலு சேர்க்கும் ஓபிஎஸ்
மே 5ஆம் தேதி காஞ்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர் 11ஆம்தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம், 12ஆம்தேதி சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஒருமாத காலம் சுற்றுப்பயணம் செய்யும் ஓபிஎஸ் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சென்னையில் ஜூன் 8, 9, ஆகிய தேதிகளில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.
மே தின விழாவில் அறிவிப்பு
சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக புதிய நிர்வாகிகள் பட்டியலை அவர் அறிவிக்கிறார். இன்று மாலை நடை பெறும் மே தின பொதுக் கூட்டத்திலும் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 மாதம் தாமதமான பயணம்
ஜெயலலிதா சமாதியில் பிப்ரவரி 7ஆம் தேதி பேசிய ஓபிஎஸ் மாநிலம் முழுவதும் சென்று மக்களை சந்திக்கப் போவதாக கூறினார். ஆனால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அணிகள் இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றதை அடுத்து பயணத்திட்டம் ஒத்திப்போடப்பட்டது. தற்போது பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிக்கும் நிலையில் மீண்டும் பயணத்தை கையில் எடுத்துள்ளார் ஓபிஎஸ்.