ஆர்.கே.நகர் மக்களிடம் புது சின்னத்தை பிரபலப்படுத்துவது எப்படி? ஓ.பி.எஸ், சசிகலா கோஷ்டி திணறல்
இரட்டை இலை சின்னம் இல்லை என்று ஆனவுடன் தங்களுக்கு கிடைத்த சின்னங்களை எவ்வாறு மக்களிடம் பிரபலப்படுத்துவது என்று சசிகலா தரப்பும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் மண்டையை உடைத்துக் கொள்கின்றனர்.
சென்னை: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 17 நாள்களே உள்ளதால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை எப்படி பிரபலப்படுத்துவது என்பது குறித்து இரு அணியினரும் வியூகம் வகுத்து வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைதேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுகவின் சசிகலா அணி, அதிமுகவின் ஓபிஎஸ் அணி, திமுக, தீபா பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி ஆகிய 9 கட்சிகளும் சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்து விட்டது. இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அதில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தேமுதிக வேட்பாளர் மதிவாணன், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு விட்டன. இந்த செய்தி பிரசுரமாகும் நேரம் வரை பிறர் வேட்புமனுக்கள் பரிசீலனையில் இருந்தன.
கட்சிக்குள்ளேயே போட்டி
அதிமுக ஒன்றாக இருந்தபோது அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மட்டுமே போட்டியிருந்து வந்தது. இந்நிலையில் தற்போது பிளவுப்பட்டு உள்ளதால், அதிமுகவின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகியவற்றுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று திமுகவும் முனைப்புக் காட்டி வருகிறது.
அறிமுகமான இரட்டை இலை
அதிமுக என்றாலே இரட்டை இலை என்பது அக்கட்சியின் டிரேட்மார்க்காக இருந்தது. இந்நிலையில் சின்னத்துக்கான போட்டியில் இரட்டை இலை முடக்குப்பட்டதால் சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும், ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்விளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரபலப்படுத்துவது எப்படி?
இந்தநிலையில் மக்கள் மனதில் உள்ள இரட்டை இலைக்கு பதிலாக தொப்பியையும் , இரட்டை மின் விளக்கையும் பிரபலப்படுத்து எப்படி என்று இருதரப்பினரும் மண்டையை பிய்த்துக் கொண்டு வருகின்றனர்.
17 நாள்களுக்குள் சாத்தியமா?
இடைத்தேர்தலுக்கு இன்னும் 17 நாள்களே உள்ள நிலையில் சின்னத்தை பிரபலப்படுத்த போராடி வந்த சசி அணிக்கு ஒரு ஐடியா தோன்றியது. அதாவது கோடை வெயில் வாட்டி வறுத்தெடுக்கத் தொடங்கியதால், அதற்கு நிவாரணமாக தொப்பியைக் கொடுத்த மாதிரியும் இருக்கும் நமது சின்னத்தை பிரபலப்படுத்தியது மாதிரியும் இருக்கும் என்பதுதான்.
ஓபிஎஸ் அணியால் முடியுமா ?
வீடுவீடாக சசிகலா அணியினர் தொப்பியை வாங்கி கொடுக்கலாம். ஆனால் இரட்டை மின் விளக்கைக் கொண்ட ஓ.பன்னீர் செல்வம் அணியினர் யோசித்தபோது அவர்களுக்கு கெட்டதிலும் ஒரு நன்மை ஏற்பட்டதாகவே தெரிகிறது. அதாவது இரட்டை மின் விளக்கு சின்னம் இரட்டை இலையை போல் உள்ளதால் மக்கள் எளிதில் சின்னத்தை மனதில் பதிய வைத்துக் கொள்வர். எனவே விளம்பரமே தேவையில்லை என்ற பாணியில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் செயல்பட உள்ளனர். அவர்களது வியூகம் தினகரனை தாக்கி பேசுவது மட்டுமே.