மொதல்ல ஓபிஎஸ்-மாஃபாவை நீக்குங்க.. அப்புறமா இணைப்பு பற்றி பேசுங்க.. நாஞ்சில் சம்பத் தடாலடி
இரு அணிகளும் பேச வேண்டும் என்றால் முதலில் ஓபிஎஸ் மற்றும் மாஃபா பாண்டியராஜனை நீக்கிவிட்டு வாருங்கள் என்று நாஞ்சில் சம்பத் தடாலடியாக கூறியுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணியும் அதிமுக அம்மா அணியும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் அந்த அணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் மாஃபா பாண்டியராஜனை நீக்க வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிளவுபட்டிருந்தது. ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டிருந்த நிலையில் திடீரென இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் ஓபிஎஸ் அணியில் இருந்து மாஃபா பாண்டியராஜன் மூலம் அறிவிக்கப்பட்டது.
பின்னர், இரு அணிகளும் இணைய வேண்டும் என்றால், சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் இருந்து முட்டுக்கட்டைப் போடப்பட்டது.
கறார்
குறிப்பாக, சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை முற்றிலுமாக கட்சியில் இருந்து நீக்கினால்தான் பேச்சுவார்த்தைக்கே வருவோம் என்று ஓபிஎஸ் டீம் கறாராக பேசியது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வந்தது.
மும்முரம்
இதற்கிடையே, தினகரன் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். மேலும் அவர் விசாரணைக்காக டெல்லி சென்ற போது அங்கு அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக மும்முரம் காட்டினர்.
பேனர்கள் அகற்றம்
தினகரன் கைது செய்யப்பட்ட உடன், சசிகலா பேனர்கள், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கழற்றி வீசப்பட்டன. என்றாலும் கூட இன்னும் முறையான பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் டீம் ஒருங்கிணையவில்லை. மேலும், மேலும், தினகரன், சசிகலா குறித்தே அவர்கள் பேசி வருகிறார்கள்.
ஓபிஎஸ் நீக்கம்
இந்நிலையில், அதிமுக அம்மா கட்சி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்திடம், சசிகலா, தினகரன் நீக்கம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த சம்பத், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றால் முதலில் ஓபிஎஸ் மற்றும் மாஃபா. பாண்டியராஜை நீக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அதிமுக அம்மா கட்சி பேச்சுவார்த்தைக்கு வரும் என்றும் தடாலடியாக கூறினார்.