ஓ.பன்னீர்செல்வம் இன்னமும் சசிகலா அணியில் தான் உள்ளார் - பகீர் கிளப்பும் சசிகலா புஷ்பா: வீடியோ
ஒ.பன்னீர் செல்வம் பதவியிலிருந்த காலத்தில் ஜெ.மரணம் குறித்து எதுவும் பேசவில்லை. இன்னமுமவர் சசிகலா அணியில்தான் உள்ளார் என சசிகலா புஷ்பா எம்.பி கூறியுள்ளார்.
மதுரை : எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டு உள்ளனர் என சசிகலா புஷ்பா எம்.பி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா எம்.பி, ''முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையில் அதிகாரம் இருந்தும் இல்லாதவராக உள்ளார். அவருக்குப் பின்னால் யாரும் இல்லை என்கிறார். ஆனால் அவரை யாரோ இயக்குகிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கையில் பதவி இருக்கும் போது ஒன்றும் செய்யவில்லை. அந்தப் பதவியைத் தொலைத்துவிட்டு, இப்போது பதவி இல்லாதபோது ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோருகிறார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறிக்கொண்டு உள்ளார். அவர் பதவியில் இருக்கும்போது ஜெயலலிதா மரணத்தில் மர்மர் இருந்தது அவருக்குத் தெரியாதா?
ஓபிஎஸ் சசிகலா அணியில் இருந்துகொண்டு இல்லை என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார். ஆக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவருமே மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என சசிகலா புஷ்பா கூறினார்.
சசிகலா புஷ்பா யாரோ எடப்பாடியை இயக்குகிறார்கள் என கூறியது சசிகலா குடும்பத்தாரையா அல்லது மத்திய அரசையா என்பது கேள்வியாக உள்ளது. ஆனால், அவர் சசிகலா சிறைக்குச் சென்ற பின்பும் அவர் மீது ராத கோபத்தில் உள்ளார் என்பது அவருடைய ஒவ்வொரு பேட்டியின் போதும் அவரை அறியாமலேயே வெளிப்படுகிறது.