சூடுபிடிக்கும் ஆர்.கே. நகர் தேர்தல்.. மதுசூதனனை ஆதரித்து இன்று முதல் ஓ.பி.எஸ். பிரசாரம்
ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து இன்று முதல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய உள்ளார்.
ஜெயலலிதா மறைந்தததையடுத்து சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தினகனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. சசிகலா தரப்பு டிடிவி தினகரன் தொகுதியில் வீடு வீடாக சென்று தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்று ஆர்.கே.நகரிலே தங்கி பணியாற்றுவேன் என்றும் உறுதி அளித்து வருகிறார் தினகரன். ஓபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், அழகு தமிழ் செல்வி ஆகியோர் ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் ஆர்.கே.நகரில் பிரசாரத்தை தொடங்குகிறார். முதலில், ஆர்கே நகர் தொகுதிக்கு உள்பட்ட நாகூரான் தோட்டப்பகுதியில் இருந்து ஓபிஎஸ் பிரசாரத்தை தொடங்குகிறார். அப்போது அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியின் தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார்.