எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் !
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணி தகவல் தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 100 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இன்று இணைந்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலைச்சின்னத்தையும் பெற ஓபிஎஸ் அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே இரு அணியும் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அணிகள் இணைப்பு குழு கலைக்கப்படுவதாக ஓபிஎஸ் நேற்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இன்று இணைந்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த ஓபிஎஸ் அணி தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தர்மேஷ், பிரகாஷ் தலைமையில் 100 பேர் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.