தினகரன் கைது தகவலை முன்கூட்டியே லீக் செய்ததா பாஜக? ஓபிஎஸ் நடவடிக்கை இதற்குத்தானா?
தினகரன் கைதாவார் என்பதை முன்கூட்டியே பாஜக கசியவிட்டதாலோ என்னவோ இரட்டை இலைக்காக கூடுதல் ஆவணங்கள் நேற்று ஓபிஎஸ் அணியினர் அவசர அவசரமாக தாக்கல் செய்தனர் என்று அதிமுக மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
சென்னை: தினகரன் கைதாவார் என்பதை முன்கூட்டியே பாஜக கசியவிட்டதாலோ என்னவோ இரட்டை இலைக்காக கூடுதல் ஆவணங்கள் நேற்று ஓபிஎஸ் அணியினர் அவசர அவசரமாக தாக்கல் செய்தனர் என்று அதிமுக மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை கபளீகரம் செய்தார் சசிகலா. இதனால் அந்த இயக்கமானது இரண்டாக துண்டாடப்பட்டது.
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்வதற்கு முன்னர் கட்சியானது வேறு யார் கைக்கும் சென்று விடக்கூடாது என்ற முனைப்பில் தனது அக்காள் மகனான டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளர் பதவி கொடுத்து அமரவைத்துவிட்டு சென்றார்.
தினகரனின் அக்கப்போர்
இதைத் தொடர்ந்து கட்சியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அத்தனை காய்களையும் தினகரன் நகர்த்தி வந்தார். மேலும் ஆட்சியிலும் அவ்வப்போது மூக்கை நுழைத்து கிட்டத்தட்ட எடப்பாடியை தனித்து செயல்படவிடாமல் தடுத்தார். இது அதிமுகவினர் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை கௌரவக் குறைச்சலாக நடத்தினார். இதனால் கொங்கு மண்டலமே கொதித்தது. இதனால் காலம் கனியும் என்று பல்லை கடித்து கொண்டிருந்தனர்.
தொடர் ஊழல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா என்ற புகாரால் மற்ற மாநிலங்களே காறி துப்பும் அளவுக்கு அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரனின் செயல்பாடு இருந்தது. இதனால் தேர்தல் ரத்தானது. அப்படியாவது தினகரன் அடங்கினாரா என்றால் இல்லை. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் அவரது பெயர் அடிபட்டது. அப்போது அதிமுக இணைப்புக்கு ஓபிஎஸ் கிரீன் சிக்னல் கொடுத்தார்.
பேச்சுவார்த்தை முன்...
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு முன்னரே இரு அணியினர் வார்த்தைகளால் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை, எடப்பாடி அணியினர் அழைக்காததால் நடைபெறவில்லை என்று ஓபிஎஸ் அணியும், இல்லை நாங்கள் எஸ்எம்எஸ் அனுப்பினோம் அவர்கள் வரவில்லை என்று எடப்பாடி அணியினரும் மாறி மாறி கூறினர். இதனால் அதிமுகவினருக்கு சலிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் எடப்பாடி அணியினரின் அழைப்பு குறித்து நேற்று ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது.
காலம் கனிந்தது
அதன்பின்னர் பேசிய ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் வந்துவிட்டது. காலம் கனிந்துவிட்டது என்றெல்லாம் கூறினார். அப்பாடா பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ஜூன் 16-ஆம் தேதி வரை காலஅவகாசம் இருந்த நிலையிலும் தேர்தல் ஆணையத்தில் 6,500 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதால் கடும் குழப்பம் நிலவியது.
டிடிவி தினகரன் கைது
இந்த சூழலில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார். இதிலிருந்து இரு ஊகங்கள் வெளிவந்துள்ளன. அதாவது பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் ஓபிஎஸ் அணியினருக்கு டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டது முன்கூட்டியே தெரிந்ததால்தான் பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்து விட்டது என்று அவர் கூறியிருக்கிறார். மற்றொன்று தினகரன் கைது செய்யப்படுவதால் இனி இரட்டை இலை தங்கள் அணிக்குதான் என்று அவசர அவசரமாக ஆவணங்களை தாக்கல் செய்திருக்கலாம். இரட்டை இலை தங்கள் அணியினருக்கு வந்துவிட்டால் அனைவரும் இங்கு வந்துவிடுவர், பிறகு பேச்சுவார்த்தையாவது, மண்ணாங்கட்டியாவது என்று ஓபிஎஸ் அணியினர் கணக்கு போட்டியிருக்கலாம் என்று தெரிகிறது.