குற்றவாளி சசியின் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது-ஓபிஎஸ் அணி 'பொளேர்' வாதம்
தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலா அறிவித்த வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது என்பதுஜனநாயகத்துக்கு எதிரானது என்று ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் வாதிடப்பட்டது.
சென்னை: தண்டனை பெற்ற குற்றவாளியான சசிகலா தேர்தலில் போட்டியிட தகுதியில்லாத போது அவர் அறிவித்த வேட்பாளருக்கு கட்சியின் சின்னமான இரட்டை இலையை ஒதுக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தேர்தல் ஆணையத்தின் முன்பு ஓபிஎஸ் அணி சார்பில் வாதிடப்பட்டது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து இன்று தலைமை தேர்தல் ஆணையத்தில் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் சார்பாக பிரபல மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடி வருகின்றனர்.
ஓபிஎஸ் அதிமுகவுக்காக மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன், குருகிருஷ்ணமூர்த்தி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடி வருகின்றனர். ஓபிஎஸ் அணியின் சி.எஸ். வைத்தியநாதன் மற்றும் குருகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்வைத்த வாதங்கள்:
உண்மையான அதிமுக
அதிமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் எங்களிடமே உள்ளனர்; நாங்களே உண்மையான அதிமுக. சசிகலா வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு சின்னம் ஒதுக்குவது அதிமுக கட்சி விதிகளுக்கு எதிரானது;
ஜனநாயகத்துக்கு எதிரானது
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்ததே கேள்விக்குறியாக உள்ளது. இந்த அவர் வேட்பாளரை நியமிப்பது முறையல்ல; அப்படியான நிலையில் அவரது வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கினால் சசிகலாவை அங்கீகரிப்பது போலாகும். தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலாவை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும்.
சின்னம் ஒதுக்கக்கூடாது
தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலாவின் வேட்பாளருக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை. போட்டியிட தகுதியில்லாத சசிகலா வேட்பாளரை அறிவிப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு ஓபிஎஸ் அணி வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தனர்.
இரட்டை இலை கிடைக்குமா?
இரண்டு அணிகளின் சார்பிலும் தலா 3 வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர். ஒவ்வொரு அணிக்கும் ஒன்றரை மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியினர் தங்களின் தரப்பு வாதத்தை ஆணித்தரமாக முன் வைத்து வரும் நிலையில் சசிகலா அணியின் சார்பிலும் ஒன்றரை மணிநேரம் வாதாட உள்ளனர். இரட்டை இலை யாருக்கு என்று தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்கும்.