ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை.. எடப்பாடி அணியோடு இணைப்பா?
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இரட்டை இலை முடக்கம், சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து கட்சியை காப்பாற்றுவது, இரு அணிகள் இணைப்பு என அதிமுகவில் பல குழப்பங்களுக்கு இன்னும் விடை தெரியாமல் உள்ளது. இதனிடையே ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் சமரச பேச்சுவார்த்தையை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த நிலையில், நேற்று பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். இதனை ஓபிஎஸ் அணியினர் மறுத்துள்ளனர். இந்த சூழலில் ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன்,கே.பி.முனுசாமி,பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோரஞ்சிதம், சின்ராஜ், மனோகரன், சரவணன், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏக்கள் ஆறுகுட்டி, சின்ராஜ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், பொன்னையன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அதிமுக அணிகள் இணைப்புக் குறித்த பேச்சுவார்த்தையை முதல்வர் எடப்பாடி அணியுடன் எப்போது தொடங்கலாம் என்று முடிவு செய்வது தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.