அணிகள் இணையுமா? ஓபிஎஸ் மாலையில் ஆலோசனை... எகிறும் எதிர்பார்ப்பு - வீடியோ
அதிமுகவின் இரு அணிகளும் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இன்று மாலை ஓபிஎஸ் தலைமையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை தனது அணியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப் போகிறார். அணிகள் இணைப்பு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் மற்றும் அவரது போயஸ் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என அறிவித்தர்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதையடுத்து இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் கை கூடி வந்துள்ளன. அதன் ஒருகட்டமாக ஓபிஎஸ் தலைமையில் அவரது அணியின் முக்கிய நிர்வாகிகள் இன்று மாலை கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அணிகள் இணைப்பு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.