சட்டசபையில் சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்த ஓபிஎஸ் அணி
சட்டசபையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஓபிஎஸ் அணியினர் புறக்கணித்துள்ளனர்.
சென்னை: சட்டசபையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஓபிஎஸ் அணியினர் புறக்கணித்துள்ளனர். ஓபிஎஸ் அணியினர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு சென்றுள்ளதால் அவர்கள் பங்கேற்கவில்லை என தெரிகிறது.
கடந்த மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் ஆதரவை நிரூபிக்க தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதனை சபாநாயகர் ஏற்கமறுத்ததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் களேபரம் ஏற்பட்டதால் எதிர்க்கட்சியினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
எதிர்க்கட்சியினர் இல்லாமல் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து சபாநாயகரின் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.
ஸ்டாலின் முன் மொழிந்தார்
சபாநாயகர் தனபாலை பதவி நீக்க கோரும் தீர்மானத்தை திமுக முன்மொழிந்தது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்தார்.
ஓபிஎஸ் அணி புறக்கணிப்பு
இதனை ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்துள்ளனர். ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் 11 பேரும் சட்டசபைக்கு வரவில்லை.
ஆர்கே.நகருக்கு சென்றுள்ளனர்
ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு சென்றுள்ளதால் அவர்கள் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது சட்டசபையில் விவாதம் நடைபெற்றது