தினகரனை ஆதரித்து பிரசாரமா? கடும் எதிர்ப்பால் தலைதெறிக்க ஓடிய தம்பிதுரை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, கொருக்குபேட்டை அருகே ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மதுசூதனனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த தம்பிதுரையின் காரை ஓபிஎஸ் ஆதரவாளர்களும், பெண்களும் வழிமறித்த
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த தம்பிதுரையின் காரை ஓபிஎஸ் ஆதரவாளர்களும், மக்களும் தாக்கியதால் அவர் வந்த வழியே திரும்பி சென்றுவிட்டார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுகவின் 2 அணிகளும், திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றனர். எனினும் அதிமுகவின் இரு அணிகளுக்கும், திமுகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த போதிலிருந்தே சசிகலா அணியினருக்கும், ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
|
தீவிர பிரசாரம்
அதிமுக சின்னம் முடக்கப்பட்டதால் தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை மின்விளக்கு சின்னத்திலும் அவர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் தங்கள் சின்னத்தை பிரபலப்படுத்த இரு தரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொருக்குபேட்டையில் பிரசாரம்
ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் நேற்று கொருக்குபேட்டையில் மீனாம்பாள் சாலையில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுட்டிருந்தார். அப்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலா அணி வேட்பாளர் தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்ய காரில் வந்தார்.
தம்பிதுரைக்கு விரட்டியடிப்பு...
அப்போது அங்கிருந்த ஓபிஎஸ் வேட்பாளர்கள் தம்பிதுரையின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்களும், பொதுமக்களும் அவரது காரை மறித்து காரின் கண்ணாடியில் வேகமாக தாக்கினர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், காரை விட்டு இறங்காமல் இருந்தார். பின்னர் எதிர்ப்பு பலமாக கிளம்பியதை தொடர்ந்து வந்த வழியே திரும்பி சென்றார். எனினும் விடாமல் அவரது காரை விரட்டி சென்றனர்.
வாக்குவாதம்
தகவலறிந்து ஆர்.கே. நகர் போலீஸார், அங்கு சென்று, ஓபிஎஸ் தரப்பினரை சமரசம் செய்தனர். இதனிடையே தம்பிதுரையை அந்த அணியினர் விரட்டியடித்த சம்பவம் குறித்து தகவலறிந்த தினகரன் தரப்பு சம்பவ இடம் வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர தாக்கி கொள்ளும் அளவுக்கு சென்றதால் போலீஸார் இரு பிரிவினரையும் அங்கிருந்து கலைய செய்தனர்.
போலீஸ் அனுமதி
கொருக்குப்பேட்டை நேரு நகரில், திமுக வேட்பாளரை ஆதரித்து, போலீஸாரின் அனுமதியுடன் நேற்று பிரசாரம் நடந்தது. ஆனால், அதிமுக எம்பி விஜயகுமார் தலைமையில் எவ்வித அனுமதியும் இல்லாமல், அதே பகுதியில் பிரசாரம் செய்தனர். இதனால், திமுகவினர், போலீஸில் புகார் செய்துள்ளனர்.